திமுக வேட்பாளர் சதீஷ்க்கு எதிர்ப்பு : ஆலங்குடியில் கட்சி வேட்டியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்
சனி, ஏப்ரல் 16,2016,
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தொகுதி திமுக வேட்பாளராக அறந்தாங்கி ஒன்றியக் குழுத் தலைவரும், ஒன்றியச் செயலருமான வீ.மெய்யநாதன் அறிவிக்கப்படுவார் என ஆலங்குடி தொகுதி திமுகவினர் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், வேட்பாளர் பட்டியலில், ஆலங்குடி பாரதி நகரைச் சேர்ந்த டாக்டர் சதீஷ் (34) வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இதனால், அதிருப்தியடைந்த அந்தக் கட்சியினர் புதன்கிழமை இரவு மறமடக்கியில் வேட்பாளருக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆலங்குடி சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள திமுக அலுவலகத்தில்லிருந்து நூற்றுக்கணக்கான திமுகவினர், வேட்பாளரை மாற்றக் கோரி கருப்புக் கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர்.ஆலங்குடி வடகாடு முக்கத்தில் கட்சி வேட்டியை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, திமுக அலுவலகத்துக்கு பூட்டுபோட முயன்றனர். வேட்பாளரை மாற்று, வேட்பாளரை மாற்று,கோஷங்களை எழுப்பியதால் பரபரப்பு நிலவியது.இந்த ஆர்ப்பாட்டம் ஆலங்குடி திமுகவினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.