திருநங்கைகளுக்கு எதிராக கருத்து கூறிய குஷ்புவை கண்டித்து சத்தியமூர்த்திபவன் முற்றுகை

திருநங்கைகளுக்கு எதிராக கருத்து கூறிய குஷ்புவை கண்டித்து சத்தியமூர்த்திபவன் முற்றுகை

செவ்வாய், ஏப்ரல் 05,2016,

காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரும், நடிகையுமான குஷ்பு கடந்த 2–ந் தேதி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். அதில், ‘திருநங்கைகள் அவசரமாக உயர் பதவிகளுக்கு செல்ல நினைக்கிறார்கள் என்று சில கருத்துகளை தெரிவித்திருந்தார்.

குஷ்புவின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து, திருநங்கை சுதா தலைமையில் 20–க்கும் மேற்பட்ட திருநங்கைகள் சென்னை ராயப்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்திபவன் முன்பு நேற்று முற்றுகை போராட்டம் நடத்தினர். குஷ்புவுக்கு எதிராக ஆவேசமாக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் குறித்து திருநங்கையும், சமூக ஆர்வலருமான சுதா நிருபர்களிடம் கூறும்போது, ‘கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெண்கள் பற்றி குஷ்பு இழிவாக கருத்து வெளியிட்டார். தற்போது தேர்தலில் போட்டியிட எங்களுக்கு தகுதி உண்டா? என்று இழிவுபடுத்தும் விதமாக பேசி உள்ளார். இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்’ என்றார்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட திருநங்கைகளிடம், காங்கிரஸ் பொதுச்செயலாளர் எம்.ஜோதி சிறிது நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குஷ்பு இவ்வாறு கருத்து கூறுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர்.