தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது : அதிமுக.வில் இணைந்த நகர செயலாளர் செல்வராஜ் பரபரப்பு பேட்டி

தேமுதிக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது : அதிமுக.வில் இணைந்த நகர செயலாளர்  செல்வராஜ் பரபரப்பு பேட்டி

வியாழன் , மார்ச் 24,2016,

நாமக்கல் மாவட்டம் பள்ளிப்பாளையம் நகர தே.மு.தி.க. செயலாளராக பதவி வகித்து வந்தவர் செல்வராஜ். இவர்  தே.மு.தி.க.வில் இருந்து விலகி அமைச்சர் தங்கமணி முன்னிலையில் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க.வில் இணைந்தார்.

தே.மு.தி.க.வில் இருந்து விலகியது ஏன்? என்பது குறித்து செல்வராஜ் கூறியதாவது:–

 

பொதுவாகவே தே.மு.தி.க. கட்சிக்குள் நடக்கக்கூடிய பிரச்சினைகளை தலைமைக்கு கொண்டு சென்றாலும், தலைமை கேட்பதில்லை. தே.மு.தி.க. குடும்ப அரசியலாக மாறிவிட்டது. உண்மையான தொண்டனுக்கு கட்சியில் மதிப்பில்லை. விஜயகாந்தின் மனைவி பிரேமலதா மற்றும் மைத்துனர் சுதீஷ் சொல்வதை மட்டுமே தான் விஜயகாந்த் கேட்கிறார். கூட்டணி குறித்து தெளிவான, உறுதியான முடிவு எடுப்பதில்லை.

வருகிற சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க. ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாது. இனிமேல் தே.மு.தி.க.வுக்கு தேய்பிறைதான். வளர்ச்சி கிடையாது.

வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று மேலும் என்னுடைய தலைமையில் தே.மு.தி.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அ.தி.மு.க.வில் இணைகிறார்கள்.இவ்வாறு செல்வராஜ் கூறினார்.