தேர்தலில் அதிமுகவுக்கு சௌராஷ்டிரா முன்னேற்ற கழகம் ஆதரவு

தேர்தலில் அதிமுகவுக்கு சௌராஷ்டிரா முன்னேற்ற கழகம் ஆதரவு

செவ்வாய், மே 10,2016,

தமிழக சட்டப்பேரவைக்கு நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவளிப்பது என சௌராஷ்டிரா அமைப்புகள் தீர்மானிக்கம் நிறைவேற்றியுள்ளது.

  சௌராஷ்டிரா முன்னேற்ற கழகம் சார்பில் அனைத்து சௌராஷ்டிரா அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் மதுரையில் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்திற்கு சௌராஷ்டிரா முன்னேற்ற கழகத்தின் தலைவர் வி.ஜி.ராம்தாஸ் தலைமை வகித்து பேசியது: அதிமுகவின் ஆட்சியில் தமிழகத்தில் தொழில் வளர்ச்சி சீராக உள்ளது. மக்களின் அடிப்படைத் தேவைகள் அனைத்தும் முறையாக நிறைவேற்றப்படுகிறது.

 தொழில் தொடங்குவதற்கு தேவையான மின்சாரம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் தடையின்றி கிடைப்பதால் தொழில் புரிய ஏற்ற இடமாக தமிழகம் திகழ்கிறது. தமிழகத்தில் இந்நிலை தொடர சட்டப்பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பது என்று முடிவு செய்துள்ளோம் என்றார்.

  கூட்டத்தில், கைத்தறி நெசவாளர்களுக்கு மத்திய அரசிடம் இருந்து வர வேண்டிய நிலுவைத் தொகையை விரைந்து பெற்றுத் தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

  சௌராஷ்டிரா முன்னேற்றக் கழகத்தின் துணைச் செயலர் டி.ஜெ.சுப்பிரமணியன், முன்னாள் எம்எல்ஏ ஓ.எஸ்.அமர்நாத், பொருளாளர் டி.கே.டி.கிருஷ்ணன், இளைஞர் அணித் தலைவர் என்.வி.வினோத்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.