நெல்லையில் அதிமுக-வுக்கு ஆதரவாக அகில இந்திய வ.உ.சி. பேரவை பிரசாரம்

நெல்லையில் அதிமுக-வுக்கு ஆதரவாக அகில இந்திய வ.உ.சி. பேரவை பிரசாரம்

ஞாயிறு, மே 08,2016,

திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக அகில இந்திய வ.உ.சி. பேரவை பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளது.

இதுதொடர்பாக, பேரவையின் மாநிலத் தலைவர் லட்சுமணபிள்ளை, பொதுச் செயலர் காந்தியா பிள்ளை ஆகியோர் திருநெல்வேலியில் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

திருநெல்வேலியில் வ.உ.சி. மணிமண்டபம் அமைத்தது, மனோன்மணீயம் சுந்தரனாருக்கு பல்கலைக்கழக வளாகத்தில் முழு உருவ வெண்கலச் சிலை அமைத்தது என தொடர்ந்து எங்களது சமூகத்துக்கு ஆதரவாக பல்வேறு திட்டங்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்படுத்தி வருகிறார். மேலும், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எங்களது சமூகத்தை இணைக்கவும் கோரிக்கை வைத்துள்ளோம். இந்த கோரிக்கையை வென்றெடுக்க அதிமுக-வுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறோம். திருநெல்வேலி சட்டப் பேரவைத் தொகுதியில் போட்டியிடும் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக தொகுதி முழுவதும் சுற்றி வந்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளோம் என்றார் அவர்.

பேட்டியின்போது, திருநெல்வேலி மாவட்டத் தலைவர் திருவடி மற்றும் பேரவை நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். முன்னதாக அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

மானூரில் வாக்குசேகரிப்பு: பின்னர், அதிமுக வேட்பாளர் நயினார் நாகேந்திரன், மானூர், களக்குடி, மானூர் ரஸ்தா உள்ளிட்ட பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்குகள் சேகரித்தார்.