பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கும் ; முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி

புதன்,ஜனவரி 4,2017,

சென்னை நீங்கலாக இதர மாவட்டங்களை நேரடி ஆய்வு செய்து, பயிர் நிலவரங்கள் மற்றும் வறட்சி நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு உத்தரவிட்டுள்ள முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அறிக்கை அளித்தவுடன், பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கும் என்று உறுதி அளித்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது;-

”முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழியில் செயல்படும் இந்த அரசு இயற்கை இன்னல்களின் போது விவசாயப் பெருங்குடி மக்களுக்கு தேவையான நிவாரணங்களை உரிய நேரத்தில் அளிப்பதிலும் முனைந்து செயல்பட்டு வருகிறது.

காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, கர்நாடக அரசு, தமிழகத்திற்கு உரிய நீரை விடுவிக்காத நிலையில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவர் வழியில் செயல்படும் தமிழக அரசு தொடர் மனுக்களை தாக்கல் செய்ததன் அடிப்படையில், உச்ச நீதிமன்ற உத்தரவுகளின் காரணமாக 30.10 டி.எம்.சி அடி தண்ணீருடன் மொத்தமாக 66.60 டி.எம்.சி.அடி தண்ணீரை நாம் பெற முடிந்தது.

இருப்பினும், போதிய நீர் கிடைக்கப் பெறாததாலும், தென்மேற்கு பருவமழையின் மூலம் போதிய மழைநீர் கிடைக்கப் பெறாததாலும், டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக 54 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான குறுவை சாகுபடி திட்டத்தினை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்து அது செயல்படுத்தப்பட்டது.

அதே போன்று, சம்பா பருவத்திலும், கர்நாடகத்திலிருந்து போதிய தண்ணீர் கிடைக்கப் பெறாததாலும், வடகிழக்கு பருவமழை பொய்த்ததாலும், டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் சம்பா சாகுபடி மேற்கொள்ள ஏதுவாக 64 கோடியே 30 லட்சம் ரூபாய் செலவிலான சம்பா சாகுபடிக்கான தொகுப்பு திட்டம் ஒன்றினை அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 18.8.2016-ல் அறிவித்தபடி செயல்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அக்டோபர் 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை வடகிழக்கு பருவமழை காலமாகும். இந்த பருவமழை காலத்தில் சராசரியாக 440 மி.மீ. மழை கிடைக்கப் பெறும். ஆனால், நடப்பு ஆண்டில் 168.3 மி.மீ. மழையே கிடைக்கப் பெற்றுள்ளது. மாநிலத்தில் உள்ள 32 மாவட்டங்களில், 21 மாவட்டங்களில் மழை குறைவு 60 சதவீதத்திற்கும் அதிகமாகும். அதாவது, இந்த மாவட்டங்களில் 40 சதவீதம் வரையே வடகிழக்கு பருவத்தில் மழை கிடைக்கப் பெற்றுள்ளது. எஞ்சியுள்ள 11 மாவட்டங்களில் மழை குறைவு 35 முதல் 59 சதவீதமாக உள்ளது.

வடகிழக்குப் பருவமழை பொய்த்து விட்டதன் அடிப்படையில், மாநிலம் முழுவதும் வறட்சி சூழ்நிலை உருவாகி உள்ளது. மத்திய அரசின் புதிய வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி மாவட்டங்களில் 10 சதவீத அளவு கிராமங்களில் பயிர் நிலை நேரடி ஆய்வு செய்யப்பட வேண்டும். அதன் பின்னரே மாவட்டங்கள் வறட்சி பாதித்தவையாக அறிவிக்க இயலும். எனவே, சென்னை நீங்கலாக இதர மாவட்டங்களை நேரடி ஆய்வு செய்து, பயிர் நிலவரங்கள் மற்றும் வறட்சி நிலை குறித்து அரசுக்கு அறிக்கை அளித்திட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனை மேற்பார்வையிட்டு அரசுக்கு விரைந்து அறிக்கை அளிக்க ஏதுவாக அமைச்சர்கள் மற்றும் மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கொண்ட குழுக்கள் உடனடியாக அமைக்கப்படும். இந்தக் குழுக்கள் 9.1.2017 வரை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்து 10.1.2017 அன்று தங்களது அறிக்கையினை அரசுக்கு அளிக்கும். இந்த அறிக்கைகளின் அடிப்படையில், வறட்சி பாதிப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு தேவையான நிவாரணங்கள் அனைத்தையும் அரசு வழங்கும் என்று உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.

பயிர் நிலைமைகள் குறித்து உயர்மட்டக்குழு அறிக்கை அளித்தவுடன், பயிர் பாதிப்புக்கு உரிய நிவாரணத் தொகையை அரசு வழங்கும் என்ற உத்தரவாதத்தையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசு வழங்கும் பயிர் நிவாரணத் தொகை தவிர, பயிர்க் காப்பீடு செய்த விவசாயிகள் காப்பீட்டு நிறுவனத்திடமிருந்து இழப்பீட்டுத் தொகையையும் பெற இயலும்.

டெல்டா பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள 12.86 லட்சம் ஏக்கர் நிலங்களில் 11.01 லட்சம் ஏக்கர் நிலங்களில் உள்ள பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. அதாவது 86 சதவீத பயிர்கள் காப்பீடு செய்யப்பட்டுள்ளன. 5.48 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இந்த பயிர்க் காப்பீட்டுக்கான பிரிமியம் தொகையாக விவசாயிகள் 44.81 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர்.

அதே போன்று, டெல்டா அல்லாத பகுதிகளில் 6.71 லட்சம் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். இந்த பயிர் காப்பீட்டுக்காக பிரிமியம் தொகையாக விவசாயிகள் 36.30 கோடி ரூபாய் செலுத்தியுள்ளனர். விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு பிரிமியம் தொகைக்கான மாநில அரசின் பங்காக 410 கோடி ரூபாய் செலுத்தப்படுகிறது. நெல் சாகுபடி மேற்கொண்ட விவசாயிகள் பயிர் பாதிப்பு அளவைப் பொறுத்து ஏக்கர் ஒன்றுக்கு 25,000/- ரூபாய் வரை இழப்பீடு தொகையாக பெற இயலும். இதர பயிர்களை விவசாயம் செய்துள்ள விவசாயிகள் பயிர் பாதிப்பு அளவைப் பொறுத்து இழப்பீடு பெற இயலும்.

பயிர் பாதிப்பு நிலைமைகளை நேரில் கண்டறிந்து உயர்மட்டக்குழுக்கள் அளிக்கும் அறிக்கைகளின் அடிப்படையில், விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் தமிழக அரசால் வழங்கப்படும் என்பதால், தற்போதுள்ள வறட்சி நிலை குறித்து விவசாயிகள் யாரும் எந்தவித அச்சமும் கொள்ளத் தேவையில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் விவசாயிகளை பாதுகாப்பது தமிழக அரசின் கடமை. அந்தக் கடமையை தமிழக அரசு செவ்வனே நிறைவேற்றும்”.இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.