பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பன்னீர் செல்வம் உத்தரவு

பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட சிறுமி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் பன்னீர் செல்வம் உத்தரவு

செவ்வாய்க்கிழமை, பிப்ரவரி 14, 2017,

சென்னை : பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதி உதவி வழங்க முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காஞ்சிபுரம் மாவட்டம், ஆலந்தூர் வட்டம், மாதா நகர் 10-வது தெருவில் வசித்து வரும் பாபு என்பவரின் மகள் சிறுமி ஹாசினி என்பவரின் சடலம் கடந்த 8-ம் தேதி அனகாபுத்தூர் அருகே காவல் துறையினரால் கண்டெடுக்கப்பட்டது என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். சிறுமி ஹாசினியை பாலியல் வன்கொடுமை செய்ததில், அச்சிறுமி உயிரிழந்துள்ளார் என்று தெரியவந்தவுடன் குற்றம் சாட்டப்பட்டவரை காவல் துறையினர் கைது செய்து, பின்னர் புழல் சிறையில் அடைத்துள்ளனர். இச்சம்பவத்திற்கு காரணமான குற்றவாளியை சட்டத்தின் முன் நிறுத்தி உரிய தண்டனையைப் பெற்றுத் தர விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு காவல் துறையினருக்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

உயிரிழந்த சிறுமி ஹாசினி குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவரின் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.