பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.408 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

பள்ளிக்கல்வித்துறை சார்பில் ரூ.408 கோடி மதிப்பீட்டில் கட்டிடங்கள் : முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்

வியாழன் , ஜூலை 21,2016,

சென்னை:பள்ளிக்கல்வித்துறை சார்பில் தமிழகம் முழுவதும் ரூ.408 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

முதலமைச்சர் ஜெயலலிதா 18.7.2016 அன்று தலைமைச்செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டம், திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் 408 கோடியே 34 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதிகள், பள்ளிக் கட்டிடங்கள், உண்டு உறைவிடப்பள்ளிக்கட்டிடங்கள், மாதிரி பள்ளிக் கட்டிடங்கள், கூடுதல் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக் கூடங்கள், நூலகக் கட்டிடங்கள், உதவி தொடக்கக்கல்வி அலுவலர் அலுவலகக்கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்து, 35 கோடியே 37 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்படவுள்ள பள்ளிக்கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

அதன்விவரம் வருமாறு:–

முதலமைச்சர் ஜெயலலிதா பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் திருச்சி மாவட்டம், திருச்சி, கோ.அபிஷேகபுரத்தில் 15,376 சதுர அடி கட்டட பரப்பளவில், 73 ஆசிரியர் மற்றும் 3 சிறப்பு விருந்தினர் தங்குவதற்கு ஏதுவாக தரை மற்றும் மூன்று தளங்களுடன் 23 தங்கும் அறைகள், 3 சிறப்பு விருந்தினருக்கான அறைகள், வரவேற்பறை, சமையலறை, உணவு உண்ணும் அறை, கூட்டரங்கம், வைப்பறை, குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளுடன் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஆசிரியர் இல்லத்தை காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.

மேலும், பள்ளி மாணவ, மாணவியரின் கல்வி மேம்பாட்டிற்காக, குறிப்பாக பெண் குழந்தைகள் கல்வி கற்பதை ஊக்குவிக்கும் பொருட்டு அனைவருக்கும் இடைநிலை கல்வித் திட்டத்தின் கீழ் விழுப்புரம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு மேல்நிலை மற்றும் மாதிரி பள்ளி வளாகங்களில் 7 கோடியே 36 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 3 மாணவியர் விடுதிகள்; கன்னியாகுமரி, காஞ்சீபுரம் மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 3 கோடியே 87 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 7 பள்ளிக் கட்டிடங்கள்; அரியலூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, பெரம்பலூர், சேலம், திருப்பூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் 54 கோடியே 7 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 மாதிரி பள்ளிக்கட்டிடங்கள்; அரியலூர், தர்மபுரி, மதுரை ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2 கோடியே 7 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 19 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 8 அறிவியல் ஆய்வுக்கூடங்கள்; நபார்டு கடனுதவி திட்டத்தின் கீழ் 31 மாவட்டங்களில் அமைந்துள்ள 234 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 269 கோடியே 18 லட்சத்து 14 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 1,716 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 196 ஆய்வுக் கூடங்கள்.

சேலம்–கரூர்

சேலம், கரூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைந்துள்ள 14 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 11 கோடியே 17 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 69 கூடுதல் வகுப்பறைகள் மற்றும் 13 ஆய்வுக் கூடங்கள்; பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த தரமான கல்வி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் 57 கோடியே 18 லட்சத்து 73 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 526 அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் கட்டப்பட்டுள்ள 747 கூடுதல் வகுப்பறைகள், 26 தொடக்கப் பள்ளி கட்டிடங்கள், 7 நடுநிலைப் பள்ளி கட்டிடங்கள், 2 உண்டு உறைவிடப்பள்ளிக் கட்டிடங்கள்; பொதுமக்களிடம் வாசிக்கும் திறனை மேம்படுத்தும் பொருட்டு பொது நூலக இயக்ககத்தின் கீழ் காஞ்சீபுரம் மாவட்டம்–எலப்பாக்கம் மற்றும் கடலூர் மாவட்டம் – வீரானந்தபுரம் ஆகிய இடங்களில் 24 லட்சத்து 23 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நூலக கட்டிடங்கள்;

வட்டார அளவில் கல்வி நிர்வாகம் செம்மையாக அமையும் பொருட்டு பகுதி–2 திட்டத்தின் கீழ், திருநெல்வேலி மாவட்டம்–சேரன்மாதேவி ஒன்றியத்தில் 17 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உதவி தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகக் கட்டிடம் என மொத்தம் 408 கோடியே 34 லட்சத்து 6 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பள்ளிக்கல்வித்துறை கட்டிடங்களை முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.

குறுந்தகடு

மேலும், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் சென்னை, கோவை, கடலூர், நாகப்பட்டினம், நாமக்கல், திருப்பூர், விழுப்புரம், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் 35 கோடியே 37 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள 22 பள்ளிக்கட்டிடங்களுக்கு முதலமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சார்பில் 10 மற்றும் 12–ம் வகுப்பு மாணவ–மாணவிகளுக்கு கணினி சார் கற்றல் அனுபவங்களை அளிக்கும் வகையிலும், செயல்முறையுடன் கல்வி கற்கும் வகையிலும் 80 லட்சம் ரூபாய் செலவில் டிஜிட்டல் கண்டன்ட் பாடங்களை உருவாக்கி, கைப்பேசி மற்றும் கணினி போன்றவற்றின் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு கல்வி கற்பிக்கும் திட்டம்; ஆசிரியர்களுக்கு கற்றல் கற்பித்தல் பயிற்சி வழங்கி அதன் மூலம் கல்வி தரத்தை மேம்படுத்திட 2 கோடியே 54 லட்சம் ரூபாய் செலவில் 58 இடங்களில் கல்வி செயற்கைகோள் வசதி ஆகியவற்றை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்தார்.

ஒன்று முதல் 5–ம் வகுப்பு வரையிலான தமிழ்ப்பாடப் புத்தகத்தில் உள்ள அனைத்து பாடல்களையும் பள்ளி மாணவ, மாணவியர் எளிதில் கற்கும் வகையில் தமிழக அரசுப்பள்ளி மாணாக்கர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கேற்புடன் 5 லட்சம் ரூபாய் செலவில் ஒளி, ஒலி பாடல்களாக தயாரிக்கப்பட்ட குறுந்தகட்டினை முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட 5 பள்ளி மாணவ–மாணவியர் பெற்றுக்கொண்டனர்.