பவானிசாகர் அணையிலிருந்து, நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு ; 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

பவானிசாகர் அணையிலிருந்து, நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவு ; 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

வியாழக்கிழமை, ஆகஸ்ட் 11, 2016,

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பழைய ஆயக்கட்டு நிலங்களின் பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறக்க முதலமைச்சர்  ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் மொத்தம் 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள் மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பழைய ஆயக்கட்டு நிலங்கள் ஆகியவற்றின் முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பவானிசாகர் அணையிலிருந்து அரக்கன்கோட்டை, தடப்பள்ளி வாய்க்கால்கள் மற்றும் காளிங்கராயன் வாய்க்கால் பழைய ஆயக்கட்டு நிலங்கள் ஆகியவற்றின் முதல் போக பாசனத்திற்கு நாளை முதல் தண்ணீர் திறந்துவிட தாம் ஆணையிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபிசெட்டிபாளையம், அந்தியூர் மற்றும் பவானி வட்டங்களில் அரக்கன்கோட்டை மற்றும் தடப்பள்ளி வாய்க்கால்கள் மூலம் 24,504 ஏக்கர் நிலங்களும், ஈரோடு வட்டத்தில் காளிங்கராயன் வாய்க்கால் மூலம் 15,743 ஏக்கர் நிலங்களும், ஆக மொத்தம் 40,247 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதை தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்வதாகவும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.