ஏழை – எளிய மக்களை பாதிக்கும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வை திரும்ப பெற முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஏழை – எளிய மக்களை பாதிக்கும் பெட்ரோல் – டீசல் விலை உயர்வை திரும்ப பெற முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தல்

வெள்ளி, ஜூன் 17,2016,

சென்னை : பெட்ரோல், டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். இந்த விலை உயர்வு காரணமாக அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வழி ஏற்படும், மேலும், ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்க்கைத் தரம் பாதிப்படையும் என்று அவர் கூறியுள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 5 காசு என்ற அளவிலும், டீசல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 1 ரூபாய் 34 காசு என்ற அளவிலும் உயர்த்தி உள்ளன. உலக சந்தைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலையை நிர்ணயித்துக் கொள்ளும் உரிமை எண்ணெய் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டதிலிருந்து மாதம் இருமுறை பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலைகளை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைக்கின்றன. விலை உயர்த்தப்படும் போதெல்லாம் உலகச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு நிலவும் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகிய காரணங்களாலேயே விலை உயர்த்தப்படுவதாக எண்ணெய் நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.

இதே காரணத்தைத் தான் தற்போதும் இவை தெரிவித்துள்ளன. எண்ணெய் நிறுவனங்கள் இந்தியாவில் எடுக்கப்படும் கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெட்ரோலியப் பொருட்களை தயாரிப்பதுடன், தேவையான அளவு கச்சா எண்ணெய்யைத் தான் இறக்குமதி செய்கின்றன. கச்சா எண்ணெய்யை சுத்திகரித்து பெறப்படும் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எண்ணெய் பொருட்களை விற்பனை செய்கின்றன. இவ்வாறு உள்ள சூழ்நிலையில் உலகச் சந்தையில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றுக்கு நிலவும் விலையினை அடிப்படையாக வைத்து அவற்றை இறக்குமதி செய்தால் நிர்ணயம் செய்யப்பட வேண்டிய விலையின் அடிப்படையில், உள்ளூர் விலையை நிர்ணயிப்பது தவறான விலை நிர்ணயக் கொள்கை ஆகும். இதை நான் ஏற்கெனவே பலமுறை சுட்டிக் காட்டியுள்ளேன். ஆனால் இந்தத் தவறான கொள்கை இன்னமும் மாற்றம் செய்யப்படவில்லை. இந்த தவறான அடிப்படையிலேயே தற்போது பெட்ரோல் மற்றம் டீசல் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளன.

மத்திய அரசு 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் பல தவணைகளில் பெட்ரோலுக்கு 11 ரூபாய் 77 காசு என்ற அளவிலும், டீசலுக்கு 13 ரூபாய் 57 காசு என்ற அளலும் கலால் வரியை உயர்த்தியுள்ளது. கச்சா எண்ணெய் விலை சரிந்த போது இதன் முழுப்பயன் மக்களை சென்றடைய விடாமல் கலால் வரி உயர்த்தப்பட்டுள்ள நிலையில் தற்போதைய விலை உயர்வு நியாயமானது அல்ல. மேலும், நான் பல முறை சுட்டிக்காட்டியுள்ளபடி அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பின் ஏற்ற இறக்கம் பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டதாகும். இந்தக் காரணிகளுக்கும் சாதாரண ஏழை, எளிய, நடுத்தர மக்களுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. எனவே இந்திய ரூபாயின் மதிப்பு என்ற காரணத்தின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயிப்பதும், மாற்றப்பட வேண்டிய கொள்கை ஆகும்.

தற்போதைய டீசல் விலை உயர்வு காரணமாக சரக்குக் கட்டணங்கள் அதிகரிக்கும். அத்தியாவசிய பொருட்கள் விலை உயர வழி ஏற்படும். ஏழை, எளிய, நடுத்தர மக்கள் வாழ்க்கைத் தரம் பாதிப்படையும். எனவே, எண்ணெய் நிறுவனங்களால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை திரும்பப் பெற வேண்டுமென நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது அறிக்கையில் கூறியுள்ளார்.