பொங்கல் திருநாள் ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

பொங்கல் திருநாள் ; முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து

சனி,ஜனவரி 14,2017,

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும் என்று பொங்கல் திருநாளை முன்னிட்டு,முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்  வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள பொங்கல் வாழ்த்து செய்தியில் கூறி ருப்பதாவது:-

உழவர் திருநாளாம் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் தமிழக மக்கள் அனைவருக்கும் எனது உளம் கனிந்த பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உழவர் மகிழும் பெருநாளாம் பொங்கல் திருநாளில், உண்டி கொடுத்து, உயிர் கொடுக்கும் உலகின் உன்னத தொழிலான உழவுத் தொழிலை மேம்படுத்திடவும், விவசாய பெருமக்களின் வாழ்வு சிறக்கவும், புரட்சித்தலைவி ஜெயலலிதா, விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கு வாழ்நாள் முழுவதும் உறுதுணையாக இருக்கும் வகையில் முதல்-அமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம்.

சிறு குறு விவசாயிகளுக்கு விலை ஏதுமில்லாமலும் மற்ற விவசாயிகளுக்கு மானிய விலையிலும் நுண்ணீர்ப் பாசனக் கருவிகள், வேளாண் கருவிகள் உள்ளிட்ட வேளாண் இடுபொருட்களுக்கு 4 சதவிகித மதிப்புக்கூட்டு வரி விலக்கு, விவசாயிகள் வேளாண்மை தொடர்பான அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்து கொள்ள உழவர் மையங்கள்.

வேளாண் தொழிலாளர்களின் பற்றாக்குறையை ஈடுசெய்யும் பொருட்டு வேளாண் இயந்திர மயமாக்கும் திட்டம், விவசாயப் பெருமக்களுக்குத் தேவையான அனைத்து விவரங்களுடன் தொகுக்கப்பட்ட விவசாய கையேடுகள்.

விவசாயிகள் தரமான, சான்று பெற்ற விதைகளை அதிகளவில் உபயோகிப்பதை ஊக்குவிக்கும் வகையில் ‘அம்மா சீட்ஸ்’ விதைகள் வழங்கும் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை விவசாயப் பெருங்குடி மக்களின் நல்வாழ்விற்காக செயல்படுத்தினார்கள்.எனவே தான் உணவு தானிய உற்பத்தியில் புதிய புதிய சாதனைகளை தமிழகம் படைத்துள்ளது.

விவசாய உற்பத்தி பெருகிடவும், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்திடவும், புரட்சித்தலைவி ஜெயலலிதா வகுத்த வேளாண்திட்டங்களை, ஜெயலலிதா வழியில் செயல்படும் அரசு சீரிய முறையில் தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.

தமிழர் திருநாளாம் பொங்கல் நன்னாளில், தமிழர்கள் வாழ்வில் இனிமையும் மகிழ்ச்சியும் பொங்கட்டும், நலமும் வளமும் பெருகட்டும் என வாழ்த்தி, தமிழக மக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது பொங்கல் நல்வாழ்த்துகளை உரித்தாக்கிக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.