மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் : முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிக்கை

மக்கள் பிரார்த்தனையால் மறுபிறவி எடுத்துள்ளேன் : முதல்வர் ஜெயலலிதா உருக்கமான அறிக்கை

திங்கள் , நவம்பர் 14,2016,

மக்களின் பிரார்த்தனை, வழிபாடுகளால் மறுபிறவி எடுத்துள்ளதாகவும், விரைவில் நடக்கவுள்ள 4 சட்டப்பேரவை தொகுதி களிலும் அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற ஆதரவு அளிக்க வேண்டுமெனவும் முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக நேற்று முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

என் அன்பிற்குரிய கழக உடன்பிறப்பு களே, என் மீது பேரன்பு கொண்ட தமிழக மக்களே, உங்கள் அனைவருக்கும் என் உளமார்ந்த வணக்கங்கள்.

உங்கள் அன்புச் சகோதரியாகிய என் மீது மிகுந்த அன்பும், பற்றும், அக்கறையும் கொண்டு தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் மற்றும் உலக நாடுகள் பலவற்றிலும் நீங்கள் செய்த பிரார்த்தனைகளாலும், வழிபாடுகளாலும் நான் மறுபிறவி எடுத்துள்ளேன் என்ற மகிழ்ச்சியான செய்தியை உங்களோடு முதற்கண் பகிர்ந்து கொள்கிறேன்.

உங்களுடைய பேரன்பு இருக்கையில் எனக்கு என்ன குறை! எப்பொழுதும் என்னை வழிநடத்திக் காத்து வருகின்ற எல்லாம் வல்ல இறைவனின் திருவருளால் நான் வெகு விரைவில் முழுமையான நலம் பெற்று வழக்கமான பணிகளில் ஈடுபடக் காத்திருக்கிறேன்.

ஓய்வு நான் அறியாதது, உழைப்பு என்னை நீங்காதது. டாக்டர் எம்.ஜி.ஆர் அறிவுரையின் பேரில், நான் பொது வாழ்வுக்கு வந்த நாள் முதல் தமிழக மக்களுக்காகவும், அதிமுக வளர்ச்சிக்காகவும் நொடிப் பொழுதும் சலிப்பில்லாமல் பாடுபட்டு வருகிறேன்.

என் பொருட்டு கழக உடன்பிறப்புகள் சிலர் அன்பு மிகுதியால், தங்கள் உயிரையே மாய்த்துக் கொண்டனர் என்பதை அறிந்து நான் மிகுந்த மன வேதனையுற்றேன். உங்களுடைய உழைப்பும், விசுவாசமும் அதிமுக வளர்ச்சிக்கும், வெற்றிக்கும் பயன்பட வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம்.

தற்போது, அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் மற்றும் புதுச்சேரி மாநிலம் – நெல்லித்தோப்பு ஆகிய தொகுதி களில் வரும் 19-ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள சூழ்நிலையில், உங்களையெல்லாம் இந்த அறிக்கை வாயிலாக நான் கேட்டுக் கொள்வது, அதிமுக வெற்றிக்கு நீங்கள் முழு மூச்சுடன் பாடுபட வேண்டும் என்பதே.

கொண்ட கொள்கையின் வெற்றிக்காகப் பாடுபடுவதிலும், ஏற்றுக்கொண்ட தலை மைக்கு விசுவாசமாக உழைப்பதிலும் தன்னிகரற்ற செயல்வீரர்கள், வீராங்கனை களாகிய கழக உடன்பிறப்புகள் என் னுடைய இந்த அறிக்கையின் இயல்பை புரிந்துகொண்டு, புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர் கண்ட வெற்றிச் சின்னமாம் “இரட்டை இலை” சின்னம் மகத்தான வெற்றி பெறும் வண்ணம் கடமை உணர்வோடு பணியாற்றுங்கள். நீங்கள் என்றும் போல் உங்கள் அன்பையும், பேராதரவையும் இந்தத் தேர்தலில் அதிமுகவுக்கு வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அதிமுக வெற்றியை தமது வெற்றி என்ற லட்சிய வேட்கையோடு, கழக வேட் பாளர்கள் அனைவரும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் கடமை உணர்வோடு தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும். “நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை தோற்கின் எப்படை வெல்லும்” என்று முழங்கிய டாக்டர் எம்.ஜி.ஆர் வழிகாட்டுதலுக்கு ஏற்ப, அதிமுக வெற்றி எட்டுத்திக்கும் எதிரொலிக் கும் வகையில் அமைந்திட வேண்டும். அத்தகைய வெற்றிச் செய்திக்காக நானும் ஆவலோடு காத்திருக்கிறேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளார்.

மேலும், முதல்வர் உடல் நலம் பற்றிய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள “அம்மா நலமுடன் இருக்கிறார்”  இந்த லிங்கை கிளிக் செய்யவும்.