மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடியில் விலையில்லா மின்சக்கரங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடியில் விலையில்லா மின்சக்கரங்கள் ; முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், செப்டம்பர் 21,2016,

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு ரூ.4 கோடி செலவில் விலையில்லா மின் சக்கரம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.மேலும், தமிழகத்தில் இயங்கி வரும் ஆறு கூட்டுறவு நூற்பாலைகளில் ரூ.14 கோடியே 20 லட்சம் செலவில் நவீன இயந்திரங்கள் நிறுவ முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கையில்,

‘பூம்புகார்’ என அழைக்கப்படும் தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகம், தமிழ்நாட்டில் உள்ள கைவினைஞர்களால்  செய்யப்பட்ட கைவினை பொருட்களுக்கு சந்தை வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கிறது. இப்பணியினை செம்மைப்படுத்தும் வகையில், கைவினைப் பொருட்களை மேம்படுத்துவதற்கான ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கைவினைப் பொருட்கள் மேம்பாடு என்ற ஒரு புதிய திட்டத்தினை இந்த நிறுவனத்தின் மூலம் செயல்படுத்த  நான் உத்தரவிட்டுள்ளேன். இந்தத் திட்டத்தின் கீழ் வடிவமைப்பு மேம்பாடு, ஒருங்கிணைந்த பயிற்சிகள், கைவினைஞர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்களுக்கான பொது வசதி மையங்கள் அமைத்தல், கண்காட்சி மற்றும் கைவினைப்பொருள் சந்தை நடத்துதல், 10,000 கைவினைஞர்களுக்கு தலா 5,000 ரூபாய் மதிப்புள்ள விலையில்லா உபகரணப் பெட்டிகள் வழங்குதல் மற்றும் நுகர்வோர் உற்பத்தியாளர் கூட்டங்களை நடத்துதல் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் செயல்படுத்தப்படும். 

இத்திட்டத்திற்கு மத்திய அரசு 17 கோடியே 14 லட்சம் ரூபாய் வழங்கும்.  மாநில அரசு 3 கோடியே 24 லட்சம் ரூபாயினை தமிழ்நாடு கைத்திறன் தொழில்கள் வளர்ச்சிக் கழகத்திற்கு இணை மானியமாக வழங்கும். மண்பாண்ட தொழில் புரியும் மக்கள் மழைக் காலங்களில் சந்திக்கும் இடர்பாடுகளைக் களைந்திடும் வகையில் மழைக்கால நிவாரணத் தொகையாக மண்பாண்ட தொழிலாளர் குடும்பம் ஒன்றுக்கு  4,000 ரூபாய் வீதம்  2014-15-ம் ஆண்டு முதல் எனது தலைமையிலான  அரசு வழங்கி வருகிறது. எங்களது தேர்தல் அறிக்கையில் மண்பாண்டங்கள் தயாரிக்க ‘சீலா வீல்’ மின் சக்கரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதியை அளித்திருந்தோம்.  இதன்படி மண்பாண்ட தொழிலாளர்களின் பணிப் பளுவை குறைத்து, உற்பத்தி திறனை மேம்படுத்த, இந்த ஆண்டு 2,000 மண்பாண்ட தொழிலாளர்களுக்கு 4 கோடி ருபாய் செலவில் விலையில்லா மின் சக்கரம் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

மேலும், மண்பாண்ட தொழிலாளர்களின் நலனுக்காக,  எங்களது தேர்தல் அறிக்கையில் ‘மண்பாண்டங்கள் செய்வதற்கான தொழிற்கூடங்கள் அமைக்க மானியம் வழங்கப்படும்’ என்று வாக்குறுதி அளித்திருந்தோம். இந்த ஆண்டு 2 கோடி ரூபாய் செலவில் கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியத்தின் கீழ் செயல்படும் மண்பாண்ட தொழில் கூட்டுறவு சங்கங்களின் பழுதடைந்த பணிக்கூடங்களை சீர் செய்தல் மற்றும் புதிய பணிக்கூடங்கள் கட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள நான் உத்தரவிட்டுள்ளேன்.  இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.