மதுரையில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுக நிர்வாகி கைது

மதுரையில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்த திமுக நிர்வாகி கைது

செவ்வாய், மே 03,2016,

மதுரையில் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்த பெண்களுக்கு பணம் கொடுத்ததாக, திமுக நிர்வாகி ஒருவரை தேர்தல் பறக்கும் படையினர் கைது செய்துள்ளனர்.

தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு இன்னும் இரண்டு வாரங்களுக்கும் குறைவான நாட்களே இருப்பதால், பிரச்சாரம் சூடு பிடித்துள்ளது. வேட்பாளர்கள் வீதிவீதியாகச் சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.இவ்வாறு பிரச்சாரம் செய்ய வரும் வேட்பாளர்களுக்கு பெண்கள் ஆரத்தி எடுக்கும் பழக்கம் காலம்காலமாக நடந்து வருகிறது. ஆரத்தி எடுத்தால் தட்டில் பணம் போட வேண்டும். இதற்காகவே ஆரத்தி எடுக்க அலை மோதும் கூட்டமும் உண்டு. அந்தவகையில், மதுரை மாவட்டம் மேலுாரில் வாக்குச் சேகரிக்கச் சென்ற திமுக வேட்பாளர் ரகுபதிக்கு அப்பகுதி பெண்கள் ஆரத்தி எடுத்தனர். அப்போது ஆரத்தி எடுத்த பெண்களுக்கு திமுக நிர்வாகி ராஜகோபால் என்பவர் பணம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இவ்வாறு ஆரத்தி எடுப்பவர்களுக்கு பணம் அல்லது பரிசுப் பொருட்கள் கொடுப்பது தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் ஆகும். எனவே இது குறித்து தகவலறிந்த தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பன விநியோகத்தில் ஈடுபட்ட ராஜகோபாலைக் கைது செய்தனர். மேலும், அவரிடமிருந்து ரூ.6,500ஐயும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.