மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு பதிலாக வேலூர் தொகுதி ஒதுக்கீடு : ஒட்டன் சத்திரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கிட்டுசாமி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு பதிலாக வேலூர் தொகுதி ஒதுக்கீடு : ஒட்டன் சத்திரம் தொகுதி அ.தி.மு.க வேட்பாளர் கிட்டுசாமி முதலமைச்சர் ஜெயலலிதா அறிவிப்பு

வியாழன் , ஏப்ரல் 21,2016,

தமிழக சட்டமன்றப் பொதுத்தேர்தலில், அ.இ.அ.தி.மு.க தோழமைக் கட்சிக்கு ஏற்கெனவே ஒதுக்கப்பட்டிருந்த ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு பதிலாக வேலூர் தொகுதி ஒதுக்கப்படுவதாக கழகப் பொதுச்செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா அறிவித்துள்ளார். வேலூர் தொகுதி கழக வேட்பாளர் வாபஸ் பெறப்படுவதுடன், ஒட்டன் சத்திரம் தொகுதி கழக வேட்பாளரையும் முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், அ.இ.அ.தி.மு.க. ஆட்சிமன்றக் குழு பரிசீலித்து எடுத்த முடிவின்படி, மே மாதம் 16-ம் தேதி நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை பொதுத் தேர்தலில், கழகக் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனிதநேய ஜனநாயகக் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்குப் பதிலாக, வேலூர் சட்டமன்றத் தொகுதி ஒதுக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.

வேலூர் தொகுதிக்கு அறிவிக்கப்பட்டிருந்த கழக வேட்பாளர் வாபஸ் பெறப்படுகிறார் என்றும், திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் சட்டமன்றத் தொகுதிக்கு அ.இ.அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக தொப்பம்பட்டி ஒன்றியக் கழகச் செயலாளர் திரு. K. கிட்டுசாமி தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.