மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே சென்னை மாநகரம் முதலிடம் : வேலைவாய்ப்பு வழங்குவதில் திருப்பூர் முதலிடம் வகிப்பதாகவும் மத்திய அரசின் ஆய்வில் தகவல்
திங்கள் , மார்ச் 14,2016,
மக்கள் நலம் மற்றும் மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே சென்னை மாநகரம் முதலிடம் வகிக்கிறது என மத்திய அரசின் சுகாதாரஅமைச்சகம் நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பு வழங்குவதில் திருப்பூர் இந்தியாவிலேயே முதலிடம் வகிப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஆங்கில நாளிதழான The Times of India வெளியிட்டுள்ள கட்டுரையில், மருத்துவசேவை வழங்குவதில் சென்னை மாநகரகம் முதலிடம் வகிப்பதாக தெரிவித்துள்ளது.
மக்கள் நலத் திட்டங்களுக்கும், மருத்துவத்திற்கும் முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா வழங்கி வரும் முக்கியத்துவம் காரணமாக, கடந்த 2012-ம் ஆண்டிலிருந்து இந்த ஆண்டு வரை சுமார் 14 லட்சம் பேருக்கு சுமார் 2 ஆயிரத்து 900 கோடி ரூபாய் வரையிலான மருத்துவக் காப்பீடு வழங்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 72 ஆயிரம் ரூபாய்க்கும் குறைவான வருமானம் உடைய ஏழை – எளிய குடும்பங்களுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை காப்பீடு எனும் திட்டத்தின்கீழ், யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனம் மூலமாக இதுவரை சுமார் 5 கோடி பேர் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொண்டுவரப்பட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 56 புள்ளி எட்டு சதவீதம் குடும்பங்கள் இத்திட்டத்தின்கீழ் கொண்டுவரப் பட்டுள்ளன. இந்நிலையில், மத்திய அரசின் சுகாதாரஅமைச்சகம் நடத்திய ஆய்வில், மக்கள் நலம் மற்றும் மருத்துவ சேவையில் இந்தியாவிலேயே சென்னை மாநகரம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக The Times of India நாளிதழ் சுட்டிக்காட்டியுள்ளது.
இதேபோல, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவின் துணிநூல் கொள்கை மற்றும் தடையில்லா மின்சாரம் வழங்கும் கொள்கையின் காரணமாக, வேலைவாய்ப்பு வழங்குவதில் இந்தியாவிலேயே திருப்பூர் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு கைத்தறி-துணிநூல் துறை நடத்திய ஆய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியாவில், கைத்தறி நெசவு மற்றும் ஆயத்த ஆடைகள் தயாரிக்கும் தொழில் நடைபெற்று வரும் 506 நகரங்களில், பெருமளவிற்கு வேலைவாய்ப்பு வழங்கும் நகரமாக திருப்பூர் விளங்குகிறது என மத்திய அரசின் ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு மேலும் பெருமை சேர்க்கும் விதமாக,வேலை வாய்ப்பு வழங்கும் நகரங்களின் முதல் 5 இடங்களில் திருப்பூர் தவிர, ஈரோடு, ராஜபாளையம் ஆகிய நகரங்களும் தேர்வு பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.