மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாட்டம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69வது பிறந்தநாள் விழா இன்று சிறப்பாக கொண்டாட்டம்

வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 24, 2017,

சென்னை : மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 69 வது பிறந்தநாளை கொண்டாட அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சென்னையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் ஜெயலலிதா பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது.

இன்று காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை அவ்வை சண்முகம் சாலையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில் அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதா உருவப்படத்திற்கு அதிமுகவினர் மலர்தூவி மரியாதை செலுத்துகின்றனர். இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா 69வது பிறந்த நாள் சிறப்பு மலர் வெளியிடப்படுகிறது.

தமிழக அரசின் சார்பில் 69 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தொடங்கி வைக்கிறார். வர்தா புயலில் வேரோடு ஆயிரக்கணக்கான மரங்கள் சாய்ந்துவிட்ட நிலையில் , பசுமைக் காடுகளை பாதுகாக்கும் நடவடிக்கையாக இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.