மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவு மண்டபம் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு மெரீனா கடற்கரையில் நினைவு மண்டபம் ; முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

ஜூன் , 29 ,2017 ,வியாழக்கிழமை,

சென்னை : மறைந்த முதல்வர் ஜெயலலிதா நினைவிடத்தில் அனைவரும் பாராட்டத்தக்க வகையில் நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் நேற்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டசபையில் நேற்று நெடுஞ்சாலைத் துறை மற்றும் பொதுப்பணித் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடை பெற்றது.இந்த விவாதத்தில் ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பங்கேற்று பேசினார்கள்.

பின்னர் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, சென்னையில் அவரின் நினைவாக நூற்றாண்டு விழா வளைவு அமைக்கப்படும்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நல்லடக்கம் செய்யப்பட்ட இடத்தில், பிரமாண்டமான நினைவு மண்டபம் அமைக்கப்படும்.இதற்காக உலகளாவிய கட்டிட கலைஞர்கள், நிறுவனங்களிடம் இருந்து வரைபடங்களை பெறுவதற்கு விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.  எல்லோரும் பாராட்டும் வகையில் நிபுணர்கள் குழு மூலம், சிறந்த வரைபடங்களை தேர்வு செய்து நினைவு மண்டபம் அமைக்கப்பட உள்ளது.இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.