மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரைகிலோ பிளீச்சிங் பவுடர், 20 குளோரின் மாத்திரை:முதல்வர் ஜெயலலிதா உத்தரவு

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு அரைகிலோ பிளீச்சிங் பவுடர், 20 குளோரின் மாத்திரை:முதல்வர்  ஜெயலலிதா உத்தரவு

புதன், டிசம்பர் 09,2015,

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும், நோய்தொற்றை தடுக்கவும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா 1/2 கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்ய 20 குளோரின் மாத்திரைகள் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தற்போது குப்பை அகற்றும் பணியில் மாநகராட்சி மற்றும் நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள் முழுவீச்சுடன் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள் நோயினால் தாக்கப்படாமல் இருக்கும் வகையில், அவர்களுக்கு தடுப்பூசிகள் உடனடியாக போடப்படவேண்டும் என உத்தரவிட்டுள்ளேன். மேலும் இந்த துப்புரவுப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு முக கவசங்கள், கையுறைகள், மழை கோட் மற்றும் ‘கம்பூட்ஸ்’ ஆகியவற்றை உடனடியாக  வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

மழை வெள்ளம் பாதித்த பகுதிகளில் உள்ள மக்களின் சுகாதாரத்தை பேணிக் காக்கவும், நோய்தொற்றை தடுக்கவும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக  பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு தலா 1/2 கிலோ பிளீச்சிங் பவுடர் மற்றும் தண்ணீரை சுத்தம் செய்ய ஏதுவாக 20 குளோரின் மாத்திரைகள் வழங்க உத்தரவிட்டுள்ளேன். பிளீச்சிங் பவுடர் மற்றும் குளோரின் மாத்திரைகள் சம்மந்தப்பட்ட உள்ளாட்சி  அமைப்புகள் மூலம் வழங்கப்படும். உடனடியாக 2,000 டன் பிளீச்சிங் பவுடர் மற்றும் 1 கோடி குளோரின் மாத்திரைகள் வழங்கப்படும்.

மேலும், சுகாதாரத் துறையினால் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது நடத்தப்பட்டு வரும் 1,105 மருத்துவ முகாம்களை தொடர்ந்து நடத்தவும் ஆணையிட்டுள்ளேன்.

மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் காய்கறிகள் கிடைக்கும் வகையில், எனது உத்தரவின் பேரில் 90 பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மற்றும் 13 நகரும் அங்காடிகள் மூலமாக காய்கறிகள்  விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இங்கு உருளைக் கிழங்கு கிலோ 23 ரூபாய் என்று விற்பனை செய்யப்பட்ட போதிலும், வெளிச் சந்தையில் கிலோ 45 ரூபாய் வரை விற்பதாக தெரிய வருகிறது.

எனவே, கூடுதலாக 100 டன் உருளைகிழங்கு, 75 டன் வெங்காயம் ஆகியவற்றை வெளி மாநிலங்களிலிருந்து கொள்முதல் செய்து பண்ணை பசுமை நுகர்வோர் அங்காடிகள் மற்றும் நகரும் அங்காடிகள் மூலமாக விற்பனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.