மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல் : ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு

மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆழ்ந்த இரங்கல் : ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவு

புதன்கிழமை, மார்ச் 15, 2017,

சென்னை : டெல்லி பல்கலைக்கழகத்தில் படித்த தமிழக மாணவர் முத்துக்கிருஷ்ணன் உயிரிழந்ததையடுத்து அவரது குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மூன்று லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்ட அறிக்கை வருமாறு:-

டில்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைகழகத்தில் ஆராய்ச்சி படிப்பு 3-ம் ஆண்டு மாணவரான, சேலம் மாவட்டம், பெரியேரி கிராமத்தைச் சேர்ந்த ஜீவானந்தம் என்பவரின் மகன் முத்துகிருஷ்ணன், கடந்த 13 ம்தேதி உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் துயரமடைந்தேன். உயிரிழந்த மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாணவர் முத்துகிருஷ்ணன் உடலை அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் உடனடியாக செய்யுமாறு அதிகாரிகளுக்கு நான் உத்தரவிட்டுள்ளேன். மேலும், அவருடைய குடும்ப சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு உயிரிழந்த மாணவர் முத்துகிருஷ்ணன் குடும்பத்திற்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து மூன்று லட்சம் ரூபாய் வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அந்த அறிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.