மாநகராட்சி பட்ஜெட்டில் வரி உயர்வு இல்லை பள்ளி மாணவர்கள்-ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகை அறிவிப்பு!
சனி, பெப்ரவரி 27,2016,
பெருநகர சென்னை மாநகராட்சி பட்ஜெட்டில், சொத்து வரி, தொழில் வரி, முத்திரைத்தாள் வரி, கேளிக்கை வரி ஆகியவை உயர்த்தப்படவில்லை. பெருநகர மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் 10-ம் வகுப்பு மாணவர்கள் பொதுதேர்வில் ஏதேனும் 3 பாடங்களில் 100-க்கு 100 மதிப்பெண் பெற்றால் ரூ.10 ஆயிரமும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்றும், 12-ம் வகுப்பு மாணவர்கள் ஏதேனும் 3 பாடங்களில் 600-க்கு 595 அல்லது அதற்கு மேல் மதிப்பெண் பெற்றால் ரூ.10 ஆயிரம் ஊக்கத்தொகையும், பயிற்றுவித்த ஆசிரியர்களுக்கு தலா ரூ.5 ஆயிரமும் ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 4 ஆண்டுகளில் 419 திட்ட பணிகளுக்கான அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டு, 271 பணிகள் முடிவடைந்துள்ளது. 130 பணிகள் நடந்து வருகிறது. 93.6 சதவீதம் பணிகள் 52 மாதங்களில் நடைபெற்றுள்ளது. பல்வேறு நிர்வாக காரணங்களால் 27 பணிகள் அதாவது, 6.44 சதவீத பணிகள் மட்டுமே கைவிடப்பட்டுள்ளன. மாநகராட்சி வரலாற்றில் இது ஒரு புதிய சரித்திரம் என்று மேயர் சைதை துரைசாமி பேசினார்.
53 மன்ற கூட்டங்கள் மொத்தம் 146 மணி நேரம் 49 நிமிடங்கள் நடந்துள்ளது. இதில் மேயர் சைதை துரைசாமி 59 மணி நேரம் 36 நிமிடங்கள் பேசி உள்ளார். 477 கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. 97 உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். 3 ஆயிரத்து 139 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.