முதற்கட்டமாக 50 இடங்களில்,அம்மா வை-பை வசதி, இலவச இணையதளம் தொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

முதற்கட்டமாக 50 இடங்களில்,அம்மா வை-பை வசதி, இலவச இணையதளம் தொடக்கம்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

சனி, செப்டம்பர் 24,2016,

சென்னை, தேர்தலில் அளித்த வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வைஃபை மண்டலம்’ ஏற்படுத்தவும், முதற்கட்டமாக 50 பள்ளிகளில் வை-பை எனப்படும் கம்பியில்லா இலவச இணையதள வசதி ஏற்படுத்தப்படும். என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

அனைத்து மக்களும் தொடர்பு கொள்ள வழி ஏற்படுத்தி, உலகை சிறிய பரப்புடையதாக்கி ‘உலகமே சிறு கிராமம்’ என்று சொல்லும் அளவுக்கு  தகவல் தொழில் நுட்பம் உலகையே சுருக்கியுள்ளது என்று சொன்னால் அது மிகையாகாது. அத்தகைய தகவல் தொழில்நுட்பத்தின் பயன் அனைவரையும் சென்றடையும் வகையில் பல்வேறு புதிய திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்தி வருகிறது. தகவல் தொழில்நுட்பவியல் துறை சார்ந்த பின்வரும் புதிய திட்டங்களை செயல்படுத்த நான் உத்தரவிட்டுள்ளேன்.

தொழில் முனைவோரின் திறனை மேம்படுத்தும் வகையில் சென்னையிலுள்ள “டைடல் பார்க்”கின் முதல் தளத்தில் 6,860 சதுர அடியில் 90 இருக்கை வசதி கொண்ட தொழில்முனைவோர் மையம் ஒன்று நிறுவப்பட்டு 1.3.2016 அன்று என்னால் திறந்து வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து, தமிழகத்தின்  இரண்டாம் நிலை நகரங்களில் உருவாக்கப்பட்டுள்ள  தகவல் தொழில் நுட்ப பூங்காக்களில் தொழில்முனைவோர் மையங்களை ஏற்படுத்த நான் ஆணையிட்டுள்ளேன். அதன்படி, இந்த ஆண்டு கோயம்புத்தூரில் உள்ள டைடல் பார்க்கில், வாடகைக் கட்டடத்தில் 2 கோடி ரூபாய் முதலீட்டில் 50 இருக்கை வசதியுடன் கூடிய தொழில் முனைவோர் மையம் ஒன்று அமைக்கப்படும். இந்த மையத்திற்கு ‘நாஸ்காம்’ நிறுவனம் ஒரு அறிவுசார் பங்குதாரராக செயல்படும்.

எங்களது தேர்தல் அறிக்கையில், “தமிழகத்தில் உள்ள பெரிய பேருந்து நிலையங்கள், வணிக வளாகங்கள், பூங்காக்கள் போன்ற பொது இடங்களில் வை-பை என்னும் கம்பியில்லா இணையதள வசதி கட்டணமில்லாமல் வழங்கப்படும்” என்ற வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.  இதனை நடைமுறைப்படுத்தும் வகையில், முதற்கட்டமாக பெரிய பேருந்து நிலையங்கள், பூங்காக்கள் போன்ற 50 இடங்களில் ‘அம்மா வைஃபை மண்டலம்’ ஏற்படுத்திட நான் ஆணையிட்டுள்ளேன். இந்த இடங்களில்  வை-பை என்னும் கம்பியில்லா இணைய வசதி மற்றும் கட்டணமில்லா இணைய வசதி ஏற்படுத்தப்படும்.  மேலும், “மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் மாணாக்கர்களுக்கு கட்டணமில்லா இணையதள வசதி செய்து தரப்படும்” என்ற வாக்குறுதியும் அளிக்கப்பட்டுள்ளது. அதனை நிறைவேற்றும் வகையில், முதற்கட்டமாக 50 பள்ளிகளில் இந்த வசதி ஏற்படுத்தப்படும். இவை 10 கோடி ரூபாய் செலவில் நிறுவப்படும். மேலும், இந்த சேவையினை நன்முறையில் தொடர்ந்து வழங்குவதற்கு ஆண்டுதோறும் ஏற்படும் செலவினத்திற்கு ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்.

தமிழ்நாடு மின்னணு நிறுவனம் கடந்த 2004-05-ம் ஆண்டு சென்னை சோழிங்கநல்லூரில் ஒரு எல்கோ சிறப்பு பொருளாதார மண்டலத்தை ‘நிறுவியது.  தற்போது சோழிங்கநல்லூர் 45,000 இளைஞர்களுக்கு நேர்முக வேலைவாய்ப்பையும், 90,000 இளைஞர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. சோழிங்கநல்லூர் ‘எல்கோஸ்’ தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த ஏற்றுமதியின் மதிப்பு 16,536 கோடி ரூபாய் ஆகும். இது,  தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறப்பு பொருளாதார மண்டலங்களின் ஏற்றுமதியில் 25 சதவீதமாகும். சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்கள் தகவல் தொழில் நுட்பவியல் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் சார்ந்த வணிகத்தை சென்னையில் தொடங்க ஏதுவாக, சென்னை சோழிங்கநல்லூரில்  உள்ள எல்கோளுநுஷ்-ல்,  2 லட்சம் சதுர அடி பரப்பளவில்,  தகவல் தொழில் நுட்ப கட்டடம்  ஒன்றினை 80 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டுவதற்கு நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.