முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்போராட்டத்திற்கு வெற்றி ; காவேரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரங்களுக்குள் அமைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

முதலமைச்சர் ஜெயலலிதாவின் சட்டப்போராட்டத்திற்கு வெற்றி ; காவேரி மேலாண்மை வாரியத்தை நான்கு வாரங்களுக்குள் அமைக்க உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதன், செப்டம்பர் 21,2016,

புதுடெல்லி ; காவிரி நீர் பங்கீடு தொடர்பான வழக்கில், காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அதிரடியாக உத்தரவிட்டுள்ள சுப்ரீம் கோர்ட், தமிழகத்திற்கு இன்று முதல் 6000 கன அடி வீதம் 27-ம் தேதி வரை தண்ணீர் திறக்க கர்நாடகத்திற்கு ஆணை பிறப்பித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பு முதல்வர் ஜெயலலிதாவின் சட்டப்போராட்டத்திற்கு கிடைத்த மற்றுமொரு மகத்தான வெற்றியாகும்.

காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக்கோரி தமிழக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு 10 நாட்களுக்கு 15 ஆயிரம் கன அடி நீர் திறந்து விடுமாறு கர்நாடகாவுக்கு உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு மனு தாக்கல் செய்தது. கர்நாடக அரசு தாக்கல் செய்த இடைக்கால மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் கொண்ட அமர்வு, இந்த இடைக்கால மனு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யும் அளவுக்கு ஏற்றதல்ல என்று கூறி, கர்நாடக அரசுக்கு கண்டனம் தெரிவித்தனர். மேலும் சுப்ரீம் கோர்ட் உத்தரவை மக்களும், மக்கள் பிரதிநிதிகளும் மதிக்க வேண்டும் என நீதிபதிகள் கூறினர்.

தொடர்ந்து, கர்நாடகாவின் மனுவை நிராகரித்த நீதிபதிகள், செப்டம்பர் 20-ம் தேதி வரை  நாள்தோறும் 12 ஆயிரம் கன அடி நீரை திறக்க வேண்டும் என்று  உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 20-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதற்கிடையே காவிரி கண்காணிப்புக்குழு நேற்று முன்தினம் பிறப்பித்த உத்தரவில் தமிழகத்திற்கு மேலும் 10 நாட்களுக்கு அதாவது, செப்டம்பர் 21-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை தினமும் 3000 கன அடி தண்ணீர் திறக்கவேண்டும் என தெரிவித்தனர்.  இந்த சூழ்நிலையில் காவிரி விவகாரத்தில் தமிழக அரசின் இடைக்கால மனு, சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் விசாரணை நடத்தினர்.

அப்போது காவிரி கண்காணிப்புக்குழுவின் தீர்ப்பின்படி 3000 கன அடி தண்ணீர் போதாது என்றும், 50 டிஎம்சி தண்ணீர் திறக்க உத்தரவிட வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழகம் முறையீடு செய்தது. அப்போது கர்நாடக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், கர்நாடக மாநிலத்தின் குடிநீர் மற்றும் பாசனத்துக்கே அணைகளில் போதிய தண்ணீர் இல்லாத போது தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க முடியாது என வாதிட்டார். மேலும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பில் மாதா மாதம் தமிழகத்திற்கு எவ்வளவு தண்ணீர் திறக்க வேண்டும் என தெளிவாக இல்லாததால் தமிழகத்தின் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.
தமிழக அரசு வழக்கறிஞர் வாதாடும்போது, தமிழகத்திற்கு கொடுக்கும் அளவுக்கு கர்நாடக அணைகளில் தண்ணீர் உள்ளது என்றும், தமிழகத்திற்குரிய தண்ணீரை திறக்காவிட்டால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், இன்று முதல் 27-ம் தேதி வரை தமிழகத்திற்கு தினமும் 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கும்படி கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டனர். மேலும், நான்கு வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கவும் உத்தரவிட்டனர்.

சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலின்படி நடைபெற்ற காவிரி கண்காணிப்புக்குழுக் கூட்டத்தில், தமிழகத்திற்கு மேலும் 10 நாட்கள் வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறக்க கர்நாடக மாநிலத்திற்கு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த நீர் திறப்பு தமிழகத்திற்கு போதாது என காவிரி மேற்பார்வைக்குழுவின் முடிவுகளை எதிர்த்து தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இதையடுத்து காவிரி நதி நீர்ப் பங்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று மதியம் விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, யு.யு.லலித் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் இது தொடர்பான விவாதம் நடைபெற்றது.

இந்த விசாரணையில் காவிரி மேலாண்மை வாரியத்தை ஏன் அமைக்கக் கூடாது? ஏன் இன்னும் அமைக்க வில்லை? என சுப்ரீம் கோர்ட் கேள்வி எழுப்பியது. மேலும்,  காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களுக்குள் அமைக்கவேண்டும் என்று மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. காவிரி கண்காணிப்புக் குழுவை இரண்டு மாநிலங்களுமே எதிர்ப்பதால், இவ்விவகாரத்தில் காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதே தீர்வாக இருக்கும் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.