முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட கோரி 7,936 கழக தொண்டர்கள் விருப்ப மனு!

முதலமைச்சர் ஜெயலலிதா தங்கள் தொகுதியில் போட்டியிட கோரி 7,936  கழக தொண்டர்கள் விருப்ப மனு!

ஞாயிறு, பெப்ரவரி 07,2016,

கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான  ஜெயலலிதா, தங்களது தொகுதிகளில் போட்டியிட வேண்டும் என்று விருப்பம் தெரிவித்து, தமிழ்நாட்டில் 7 ஆயிரத்து 936 வேட்பு மனுக்களை கழக தொண்டர்கள் சமர்ப்பித்துள்ளனர்- கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா தங்கள் தொகுதியிலும், இன்ன பிற தொகுதிகளிலும் போட்டியிட வேண்டும் என்று இளைஞர்கள், இளம் பெண்கள், மகளிர் என ஆர்வத்துடன் 7 ஆயிரத்து 936 கழக தொண்டர்கள் விருப்ப மனுக்களை அளித்துள்ளனர் என்பது எந்த ஓர் அரசியல் இயக்கத்திலும் இதுவரை நடைபெற்றிடாத வியப்புக்குரிய நிகழ்வு என்பது குறிப்பிடத்தக்கது.

கழக அமைப்பு ரீதியாக செயல்பட்டு வரும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, மகாராஷ்டிரா, கேரளா, புதுடெல்லி மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் ஏராளமான கழக தொண்டர்கள், கழகப் பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான செல்வி ஜெயலலிதா தமிழகத்தில் பல்வேறு தொகுதிகளில் போட்டியிட விருப்ப மனு அளித்துள்ளனர் என்பது, `அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம்’ முதலமைச்சர்  ஜெயலலிதாவின் சீரிய தலைமையின் கீழ் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தமிழக மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றுள்ளதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.

கழக தொண்டர்கள், தாங்கள் போட்டியிடுவதற்கு வாய்ப்பு கோரி, தமிழ்நாட்டில் 17 ஆயிரத்து 698 வேட்பு மனுக்களையும், புதுச்சேரி மாநிலத்தில் 332 வேட்பு மனுக்களையும், கேரள மாநிலத்தில் 208 வேட்பு மனுக்களையும் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களிலும் கழகத்தின் சார்பில் வேட்பாளர்களாகப் போட்டியிட வாய்ப்பு கோரி மொத்தம் 26 ஆயிரத்து 174 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மூலம் வேட்பு மனுக் கட்டணமாக 28 கோடியே 40 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.