முதலமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்த, பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டகால கனவுத்திட்டமான விசுவகுடி – கல்லாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறப்பு
திங்கள் , பெப்ரவரி 29,2016,
முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா, காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்த விசுவகுடி – கல்லாறு நீர்த்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் நேற்று திறந்துவிடப்பட்டது.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம், தொண்டமாந்துறை கிராமத்தில், விசுவகுடி அருகில் கல்லாறு ஓடையின் குறுக்கே 33 கோடியே 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கத்தை முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.
இதனைத்தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று இந்நீர்தேக்கத்திலிருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. பெரம்பலூர் மாவட்ட மக்களின் நீண்டகால கனவுத்திட்டமான விசுவக்குடி நீர்த்தேக்கத்திட்டத்தினை தங்களுக்கு அர்ப்பணித்த முதலமைச்சருக்கு விவசாயிகள், பொதுமக்கள் நெஞ்சம் நெகிழ நன்றியினைத் தெரிவித்துக் கொண்டனர். இதில், நாடாளுமன்ற உறுப்பினர் திரு. ஆர்.பி. மருதராஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.