முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி : அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன்

முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி : அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன்

ஞாயிறு, நவம்பர் 20,2016,

சென்னை : முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன்  தெரிவித்துள்ளார்.

சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 58 நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.முதல்வர் ஜெயலலிதா குணம் அடைந்ததை அடுத்து தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.முதலமைச்சர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டதை அறிந்த அ.தி.மு.க. தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ஆடிப்பாடியும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர்.

இந்த நிலையில்,சென்னை அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அதிமுக செய்தித் தொடர்பாளர் பொன்னையன் , தீவிர சிகிச்சை பிரிவில் இருந்து தற்போது சிறப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதா பூரண நலமுடன் உள்ளதாக தெரிவித்தார். முதல்வர் ஜெயலலிதா தனி அறைக்கு மாற்றப்பட்டுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் அவர் பணிக்கு திரும்புவார் எனவும் கூறினார். மேலும் நான்கு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல்களில் அதிமுக அமோக வெற்றி பெறும் என்றும் முதலமைச்சர் ஜெயலலிதா நலம் பெற பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பொன்னையன் தெரிவித்தார்.