முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் லாபத்தில் இயங்கும் கூட்டுறவு நூற்பாலை : முதலமைச்சருக்கே தங்கள் ஆதரவு என தொழிலாளர்கள் உறுதி
சனி, மார்ச் 19,2016,
கன்னியாகுமரி மாவட்டத்தில், கடந்த தி.மு.க ஆட்சியில் மூடும் நிலையில் இருந்த கூட்டுறவு நூற்பாலை, முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கையால் இன்று லாபகரமான நிலைக்கு வந்துள்ளதால், தொழிலாளர்களுக்கு பணி பாதுகாப்பு மற்றும் வருமானம் அதிகரித்துள்ளது. செல்வி ஜெயலலிதா தொடர்ந்து முதலமைச்சராக வர வேண்டும் என்றும், முதலமைச்சருக்கு எப்போதும் ஆதரவாக இருப்போம் என்றும் கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கடந்த தி.மு.க ஆட்சியில் நிர்வாக சீர்கேடுகளால் மாநிலம் முழுவதும் இருந்த 13 கூட்டுறவு நூற்பாலைகளும் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டு, தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாய நிலை ஏற்பட்டது. அந்த நிலையில் இருந்த கூட்டுறவு நூற்பாலைகளில் ஒன்றுதான், கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் உள்ள கூட்டுறவு நூற்பாலை. கடந்த 1966ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நூற்பாலை, கடந்த தி.மு.க ஆட்சியில் மூடும் நிலைக்கு தள்ளப்பட்டது. இந்நிலையில், கடந்த 2011ம் ஆண்டு செல்வி ஜெயலலிதா முதலமைச்சராக பதவியேற்றதும், நஷ்டத்தில் இருந்த இந்த கூட்டுறவு நூற்பாலையை மீட்டு லாபகரமான நிலைக்கு கொண்டு வந்துள்ளார். இதுதவிர, 32 கோடி ரூபாய் முதலமைச்சர் நிதி ஒதுக்கீடு செய்ததையடுத்து, நூற்பாலை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் நாளொன்றுக்கு 4 ஆயிரம் கிலோ நூல் உற்பத்தியான இந்த நூற்பாலையில், தற்போது 8 ஆயிரம் கிலோ நூல் உற்பத்தி நடைபெற்று வருகிறது. பணி பாதுகாப்பு மற்றும் வருமான அதிகரிப்புக்கு வழிவகை செய்த முதலமைச்சர் செல்வி ஜெயலலிதாவுக்கு, தொழிலாளர்கள் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்துக் கொண்டனர். செல்வி ஜெயலலிதா தொடர்ந்து முதலமைச்சராக வர வேண்டும் என்றும், முதலமைச்சருக்கு எப்போதும் தாங்கள் ஆதரவாக இருப்போம் என்றும், கூட்டுறவு நூற்பாலை தொழிலாளர்கள் உறுதிபடத் தெரிவித்தனர்.