முதல்வர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் : இந்தியா டுடே விருது வழங்கி கவுரவிப்பு

முதல்வர் ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், அனைத்து துறைகளிலும் தமிழகம் முதலிடம் : இந்தியா டுடே விருது வழங்கி கவுரவிப்பு

சனி, நவம்பர் 05,2016,

சென்னை  – முதலமைச்சர்  ஜெயலலிதாவின் முன்னோடித் திட்டங்களால், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகளில் நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தைப் பிடித்து சாதனைபடைத்துள்ளதற்காக இந்தியா டுடே விருது வழங்கி கவுரவித்துள்ளது. 

“மக்களால் நான், மக்களுக்காகவே நான்” என்ற உயரிய நோக்கத்துடன், முதலமைச்சர்  ஜெயலலிதா, கல்வி, வேளாண், சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் நாட்டிற்கு முன்னோடியான எண்ணற்றத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

முதலமைச்சரின் இத்தயை சீர்மிகு திட்டங்களால், நாட்டிலேயே முதன்மை மாநிலமாக தமிழகம் திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலம் எது என்பதை கண்டறிவதற்காக இந்தியா டுடே சார்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், வேளாண், கல்வி, சட்டம்-ஒழுங்கு, இ-கவர்னன்ஸ், சுகாதாரம், உள்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் உள்ளிட்ட 10 துறைகளில், நாடு முழுவதும் கள ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் முடிவில், நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் தமிழகம் முதலிடத்தை பெற்றுள்ளது.

இதற்காக, இந்தியா டுடே, விருது வழங்கி கவுரவித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இதற்கான விருதை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லியிடம் இருந்து தமிழக தொழில் துறை அமைச்சர்  எம்.சி சம்பத் பெற்றுக்கொண்டார். நாட்டிலேயே மிக முன்னேறிய மாநிலங்களில் கேரளா இரண்டாவது இடத்தையும், ஆந்திர மாநிலம் கடைசி இடத்தையும் பிடித்துள்ளது.