முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள் சிகிச்சை ; உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்

முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிங்கப்பூர் பிசியோதெரபி பெண் நிபுணர்கள்  சிகிச்சை ; உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம்

வியாழக்கிழமை, அக்டோபர் 20, 2016,

சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் சிங்கப்பூர் ‘பிசியோ தெரபி’ பெண் நிபுணர்கள் தொடர்ந்து முதல்வர் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.தீவிர சிகிச்சையின் பலனாக ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.

தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக சென்னை ஆயிரம் விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் கடந்த மாதம் 22-ந் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.

அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் சிவகுமார் தலைமையிலான மருத்துவ குழுவினர் தொடர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மற்றும் டெல்லி எய்ம்ஸ் ஆஸ்பத்திரி டாக்டர்கள் கில்நானி, அஞ்சன் டிரிக்கா, நிதிஷ்நாயக் ஆகிய மருத்துவ குழுவினரும் ஜெயலலிதாவின் உடல்நிலையை கண்காணித்து சிகிச்சை அளித்தனர்.

தீவிர சிகிச்சையின் பலனாக ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது. இதையடுத்து லண்டன் டாக்டரும், எய்ம்ஸ் மருத்துவ குழுவினரும் நேற்று புறப்பட்டு சென்றனர். அவர்கள் செல்வதற்கு முன்பு,முதல்வர் ஜெயலலிதாவுக்கு வரும் நாட்களில் அளிக்கப்பட வேண்டிய சிகிச்சை முறைகள் குறித்து அப்பல்லோ ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினருக்கு சில ஆலோசனைகளை வழங்கிவிட்டு சென்றுள்ளனர். அதனடிப்படையில் அவருக்கு சிகிச்சை தொடர்கிறது.

முதல்வர்  ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளிப்பதற்காக லண்டன் டாக்டர் ரிச்சர்டு ஜான் பீலே மீண்டும் இந்த வார இறுதியில் வர உள்ளார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவ குழுவினர் தொலைபேசி, இ-மெயில் மூலம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர்.

சிங்கப்பூர் மவுன்ட் எலிசபெத் ஆஸ்பத்திரி பிசியோ தெரபி நிபுணர்கள் சீமா, மேரி ஆகியோர் தொடர்ந்து 3-வது நாளாக ஜெயலலிதாவுக்கு பிசியோ தெரபி சிகிச்சையை நேற்று அளித்தனர். அப்பல்லோ ஆஸ்பத்திரி மருத்துவ குழுவினரும் 24 மணி நேரமும் ஜெயலலிதாவின் உடல்நிலையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.தீவிர சிகிச்சையின் பலனாக ஜெயலலிதாவின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்து வருகிறது.