முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தபடி,அ.தி.மு.க பொதுக்குழு- செயற்குழு இன்று கூடுகிறது

முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தபடி,அ.தி.மு.க பொதுக்குழு- செயற்குழு இன்று கூடுகிறது

வியாழன் , டிசம்பர் 31,2015,
சென்னை : கழக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா அறிவித்திருந்தபடி, அ.தி.மு.க செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம், சென்னையில் இன்று நடைபெறுகிறது இந்த பொதுக்குழுவில் பங்கேற்க வருகை தரும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க போயஸ் தோட்டத்தில் இருந்து திருவான்மீயூர் வரை பிரம்மாண்டமான ஏற்பாடுகளை அதிமுகவினர் ஏற்பாடு செய்துள்ளனர்.

அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் இன்று காலை 10.30 மணிக்கு, அதிமுக அவைத் தலைவர் இ.மதுசூதனன் தலைமையில், சென்னை திருவான்மியூர், எண்.24. டாக்டர் வாசுதேவன் நகர், ஸ்ரீராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் நடைபெறும் என அதிமுக பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் கலந்துகொள்வதற்காக அதிமுக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித் தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும் என்றும், உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்றும் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இதன்படி, கழக செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டத்திற்கான ஏற்பாடுகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்திற்கு வருகை தரும் முதல்வர் ஜெயலலிதாவை வரவேற்க வழிநெடுக கொடி, தோரணங்கள் கட்டப்பட்டுள்ளன. முதல்வர் ஜெயலலிதா ஆட்சி சாதனைகளை விளக்கி ஏராளமான பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன. முதல்வரை வரவேற்க பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாரை தப்பட்டை, செண்டை மேளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. பொதுக்குழு நடைபெறும் இடத்தின் நுழைவுவாயிலில் செயற்கை யானைகள் நிறுத்தப்பட்டுள்ளன. உண்மையான நிஜ யானை என்று சொல்லும் அளவுக்கு தத்ரூபமாக யானைகள் உள்ளன. தும்பிக்கையை உயர்த்தி பிளிறுவது போன்று அமைக்கப்பட்டுள்ளது.

சாலையின் இருபக்கமும் பொதுமக்களும், தொண்டர்கள் நிற்பதற்கு வசதியாக சவுக்கு கட்டை தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பொதுக்குழு கூட்டம் செல்லும் வழியெங்கும் அலங்கார வளைவுகளும், பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் அடங்கிய பேனர்கள் வழியெங்கும் வைக்கப்பட்டுள்ளன. அதிமுக கொடி தோரணங்கள் கட்டப்பட்டு சென்னை திருவான்மியூர் பகுதியே கோலாகலமாக காணப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தையொட்டி அதிமுகவினர் இன்று அதிகாலையிலேயே திருவான்மியூரில் குவிந்தனர். இன்று காலை 10-30 மணிக்கு நடைபெறவிருக்கும் பொதுக்குழு மற்றும் செயற்குழுவில் பங்கேற்க அதிகாலையிலேயே அதிமுகவினர் பேருந்துகள் மூலம் வந்த வண்ணம் உள்ளனர். வரும் 2016 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், பரபரப்பான அரசியல் சூழ்நிலைகளுக்கு இடையே அதிமுக பொதுக்குழுவில் மேற்கொள்ளப்பட இருக்கும் முடிவுகள் என்ன என்பது அறிந்து கொள்ள தமிழக மக்கள் ஆர்வத்தோடும் ஆவலோடும் காத்திருக்கின்றனர்.