முதல்வர் ஜெயலலிதா தனது உணவை தாமே உண்ணுகிறார் : பொன்னையன் தகவல்

முதல்வர் ஜெயலலிதா தனது உணவை தாமே உண்ணுகிறார் : பொன்னையன் தகவல்

வெள்ளி, அக்டோபர் 21,2016,

சென்னை ; உடல்நலக் குறைவால் சென்னை அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட முதலமைச்சர் ஜெயலலிதா தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு,சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள சீமா, மேரி ஆகிய 2 பெண் பிசியோதெரபி நிபுணர்களும் பிசியோதெரபி சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சிகிச்சை அவருக்கு நல்ல பலனளித்து வருகிறது.
இந் நிலையில், முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சரும் அதிமுக செய்தி தொடர்பாளருமான பொன்னையன் தெரிவித்துள்ளார். அப்பல்லோ மருத்துவமனை வளாகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பொன்னையன் கூறியதாவது:- “ இறைவன் அருளாலும் மருத்துவர்களின் அற்புதமான சிகிச்சையாலும் முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. தனக்கு தேவையான உணவை தாமே அருந்தும் அளவுக்கு ஜெயலலிதா உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் தற்போது முதல் அமைச்சர் ஜெயலலிதா ஓய்வு எடுத்து வருகிறார்” என்று அவர் கூறினார்.
முதலமைச்சர் ஜெயலலிதாவின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதையடுத்து அதிமுக தொண்டர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.