முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் சிறிய மாற்றம் : வேலூரில் மே 10-ந் தேதியும், நெல்லையில் மே 12-ந் தேதியும் பேசுகிறார்

முதல்வர் ஜெயலலிதா தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தில் சிறிய மாற்றம் : வேலூரில் மே 10-ந் தேதியும், நெல்லையில் மே 12-ந் தேதியும் பேசுகிறார்

செவ்வாய், ஏப்ரல் 12,2016,

முதலமைச்சர் ஜெயலலிதாவின் தேர்தல் பிரசாரத்தில் மாற்றம் செய்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, மே 10-ந் தேதி நெல்லையில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம் மே 12-ந் தேதிக்கும், மே 12-ந் தேதி வேலூரில் நடைபெற இருந்த தேர்தல் பிரசாரம் மே 10-ந் தேதிக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

பிரசார சுற்றுப்பயண திட்டம்

நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அ.தி.மு.க. 227 இடங்களிலும், கூட்டணி கட்சிகள் 7 இடங்களிலும் போட்டியிடுகின்றன. இதற்கான அ.தி.மு.க. வேட்பாளர் பட்டியல் கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்டது.

அன்றைய தினம் மாலையிலேயே அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், முதலமைச்சருமான ஜெயலலிதாவின் தேர்தல் பிரசார சுற்றுப்பயண திட்டம் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, கடந்த 9-ந் தேதி சென்னையில் தொடங்கிய அவரது பிரசாரம் மே 12-ந் தேதி வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

சென்னை, விருத்தாசலத்தில் பிரசாரம்

சென்னை மற்றும் விருத்தாசலத்தில் தனது தேர்தல் பிரசாரத்தை முதலமைச்சர் ஜெயலலிதா நிறைவு செய்துள்ளார். இந்த நிலையில் தேர்தல் பிரசாரத்தில் சிறிய மாற்றம் செய்து அ.தி. மு.க. தலைமைக் கழகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதாவது, மே 10-ந் தேதி நெல்லை மாவட்டத்தில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரம் மே 12-ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதே போன்று மே 12-ந் தேதி வேலூர் மாவட்டத்தில் மேற்கொள்வதாக இருந்த தேர்தல் பிரசாரம் மே 10-ந் தேதிக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேலூரில் மே 10-ந் தேதி…

முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 14-ம் நாள் தேர்தல் பிரசாரம் மே 10-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) வேலூரில் நடைபெறுகிறது. இதில், வேலூர், அணைக்கட்டு, குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர், ஜோலார்பேட்டை, திருப்பத்தூர், அரக்கோணம் (தனி), சோளிங்கர், காட்பாடி, ராணிப்பேட்டை, ஆற்காடு, கீழ் வைத்தியணான் குப்பம் (தனி), போளூர், ஆரணி, செங்கம் (தனி), கலசபாக்கம் ஆகிய தொகுதிகள் இடம் பெறுகின்றன.

15-ம் நாள் தேர்தல் தேர்தல் பிரசாரம் மே 12-ந் தேதி (வியாழக்கிழமை) நெல்லையில் நடைபெறுகிறது. இதில், திருநெல்வேலி, பாளையங்கோட்டை, சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம், அம்பாசமுத்திரம், நாங்குநேரி, ராதாபுரம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஒட்டப்பிடாரம் (தனி), கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவன்கோடு, கிள்ளியூர் ஆகிய தொகுதிகள் இடம் பெறுகின்றன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.