விஜயகாந்த் அரசியல் வியாபாரி;ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

விஜயகாந்த் அரசியல் வியாபாரி;ஓ.பன்னீர்செல்வம் கடும் தாக்கு

ஞாயிறு, பெப்ரவரி 14,2016,

மதுரை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் அரசியல் வியாபாரி என்றும் அவர் தற்போது அரசியல் பேரம் பேசி வருவதாகவும் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

மதுரை தமுக்கம் மைதானத்தில் தென் மண்டல அதிமுக வழக்கறிஞர் பிரிவு தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், உதயகுமார், செல்லூர் ராஜூ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

அப்போது அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசியதாவது:

தமிழக அரசியல் வரலாற்றில் எந்த ஒரு அரசியல் முடிவும், மாற்றமும் மதுரையை மையமாக வைத்தே நடந்துள்ளது. அதிமுகவை முடக்க திமுக தலைவர் செய்த எத்தனையோ சோதனைகள், தடைகளை முதல்வர் ஜெயலலிதா தடுத்து இயக்கத்தைக் காப்பாற்றியுள்ளார். திமுக ஆட்சியில் தொடரப்பட்ட பொய் வழக்குகளை சட்டத்தின் மூலம் சந்தித்து வெற்றி பெற்றுள்ளார். கூட்டணியை பற்றி கவலைப்படாதீர்கள். ஜெயலலிதா பார்த்துக்கொள்வார். யாராக இருந்தாலும், எந்த கட்சியாக இருந்தாலும் சரி. அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது. அதிமுக 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும். விஜயகாந்த் அரசியல் வியாபாரி. அவர் அரசியல் பேரம் செய்கிறார். ஒரு நல்ல தீர்ப்பை மக்கள் தருவார்கள். அந்த தீர்ப்பை பெற தேர்தல் பணியாற்றுவோம்” என்று ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.