விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் பாராட்டுச் சான்றிதழ் ; அமைச்சர் பி.பென்ஜமின் அறிவிப்பு

விடுமுறை எடுக்காமல் பள்ளிக்கு வந்தால் பாராட்டுச் சான்றிதழ் ; அமைச்சர் பி.பென்ஜமின் அறிவிப்பு

புதன், ஆகஸ்ட் 10,2016,

ஆண்டு முழுவதும் விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள், ஆசிரியர்களைப் பாராட்டி சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் பி.பென்ஜமின் அறிவித்தார்.

சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை அவர் வெளியிட்ட மேலும் பல அறிவிப்புகள்:- தொலைதூர-மலைப் பகுதியில் குடியிருப்புகளில் வாழும் குழந்தைகள் இடர்பாடுகள் ஏதுமில்லாமல் பள்ளிக்குச் செல்வது அவசியமாகும். அவர்களது இடைநிற்றலைத் தவிர்க்க போக்குவரத்து வசதி, வழிக் காவலர் வசதி ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் நிகழ் கல்வியாண்டிலும் செயல்படுத்தப்படும்.

பள்ளிகளில் இருந்து இடைநின்ற குழந்தைகளும், இடம்பெயர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளும் கல்வி பயில சிறப்புப் பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி, 3 ஆண்டுகளில் 20 ஆயிரம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

நூல்கள் மின்மயம்: தமிழ்நாடு பாடநூல் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ள சுமார் ஆயிரம் நூல்கள் தமிழ் இணையக் கல்விக் கழகத்துடன் இணைந்து மின்மயமாக்கி இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும்.

93 பகுதிநேர நூலகங்களானது ஊர்ப்புற நூலகங்களாகத் தரம் உயர்த்தப்படும். இதற்கென நூலகர் பணியிடங்கள் உருவாக்கப்படும். 32 மாவட்டங்களில் உள்ள மைய நூலகங்களில் சூரியஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் அளிக்கப்படும்.

இலவச சிறப்புப் பயிற்சி மையம்:

சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவனத்தில் ஆங்கில வழியில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு தொடங்கப்படும். இதனால், ஆண்டுதோறும் 50 மாணவர்கள் பயனடைவர்.

பார்வையற்றவர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வை எதிர்கொள்ள சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது. இந்தப் பயிற்சியானது மூன்று மாவட்ட ஆசிரியர் கல்வி-பயிற்சி நிறுவனங்களில் அனைத்து தேர்வர்களுக்கும் அளிக்கப்படும்.

பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு:

அனைத்து அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கும் பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு பயிற்சி அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, நிகழ் கல்வியாண்டில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பேரிடர் மேலாண்மை குறித்த விழிப்புணர்வு பெற அனைத்து அரசு-அரசு உதவி பெறும் பள்ளிகளில் போட்டிகள் நடத்தி விழிப்புணர்வு வாரம் கடைபிடிக்கப்படும்.

3-ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பாடப் புத்தகங்களுடன் இலக்கணப் பயிற்சித் தாள்கள் அறிமுகப்படுத்தப்படும்.இவ்வாறு அமைச்சர் பி.பென்ஜமின் கூறினார்.