வெற்றிக்கான பணிகள் அனைத்தையும் தொடங்கிடுவீர் தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வெற்றிக்கான பணிகள் அனைத்தையும் தொடங்கிடுவீர் தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா வேண்டுகோள்

வெள்ளி, ஏப்ரல் 01,2016,

தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். சட்டமன்ற தேர்தலில், அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியை பெற அ.தி.மு.க.வினர் சூளுரைக்க வேண்டும் என்று தொண்டர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அன்புக் கட்டளையிட்டுள்ளார்.

சட்டமன்ற தேர்தலையட்டி, தமிழக முதலமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா கட்சி தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டு அறிக்கைகள் வெளியிட்டு வருகிறார்.

அதன்படி, தற்போது அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;

“தீய சக்தியின் அராஜகத்துக்கும், ஊழலுக்கும், சூறையாடலுக்கும், ஒழுக்கக் கேடுகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்க உங்களால் மட்டும் தான் முடியும்” என்று தமிழ்நாடு மக்கள் ஒருமித்த குரலில் விடுத்த அழைப்பை ஏற்று, புரட்சி தலைவர் எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்ட மாபெரும் மக்கள் இயக்கம் தான் அ.தி.மு.க.

தீய சக்தியின் கொடூரமான அடக்குமுறை, வன்முறை வெறியாட்டம் ஆகியவற்றை எல்லாம் வெற்றிகரமாக சமாளித்து, இந்த இயக்கத்தை கண்ணின் மணி என்று காத்தார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆரின் மறைவுக்கு பிறகு, நமது இயக்கத்தை அழித்துவிட துடித்த நம் அரசியல் எதிரிகளால் பல்வேறு சோதனைகளையும், சொல்லொண்ணா சூழ்ச்சிகளையும், சதிகளையும் உங்கள் அன்புச் சகோதரியாகிய நான் சந்திக்க நேர்ந்தது.

எம்.ஜி.ஆர் தோற்றுவித்த இந்த ஒளி விளக்கை(அ.தி.மு.க.) அணையாது காக்க வேண்டும். இது என்றென்றும் மக்களின் இயக்கமாகத் திகழ வேண்டும் என்பதற்காக நான் அனைத்து சோதனைகளையும் மன உறுதியுடன் ஏற்றுக்கொண்டு உங்களுக்காக, தமிழக மக்களுக்காக பாடுபட்டு வருகிறேன்.
எனக்கென்று தனிப்பட்ட வாழ்வு இல்லை. எனக்கென்று தனிப்பட்ட எதிர்பார்ப்புகள் ஏதும் இல்லை. நான் வாழ்வதே இந்த இயக்கத்துக்காக தான். தமிழக மக்களுக்காக தான். ஒவ்வொரு நொடிப் பொழுதும் நம்முடைய இயக்கத்தைப் பற்றியும், தமிழ்நாடு மக்களுக்கு இந்த இயக்கம் ஆற்ற வேண்டிய பணிகள் பற்றியும் தான் நான் சிந்தித்த வண்ணம் இருக்கிறேன்.
தமிழக மக்களின் மகிழ்ச்சி தான் எனது லட்சியம். தமிழக மக்களின் வளர்ச்சியும், வளமான வாழ்வும் தான் நான் காண விரும்பும் இலக்குகள். உங்களுக்காகவே உயிர் வாழ்கிறேன் என்பதை நான் ஆத்மார்த்தமாக உணர்கிறேன். இறைவன் எனக்கு விடுத்த அழைப்பாகவே இந்த வாழ்வை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்கிறேன்.

எனது தலைமையிலான அரசு மகத்தான சாதனைகளை மக்களுக்கு அளித்து சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களையும் உயர்வடைய செய்து வரும் மனநிறைவோடு அ.தி.மு.க.வின் ஆண்டு விழாவை கொண்டாடுகிறோம்.

நாடே வியந்து பாராட்டும் வண்ணம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை வெற்றிக்கரமாக நடத்தி, அதன் மூலம் ரூ.2 லட்சத்து 42 ஆயிரத்து 160 கோடி முதலீட்டுக்கு வழிவகை செய்து, எண்ணற்ற புதிய தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் தொடங்கப்படுவதற்கும், லட்சக்கணக்கான இளைஞர்கள், இளம்பெண்கள் புதிய வேலைவாய்ப்புகளை பெறுவதற்கும் வாய்ப்பினை ஏற்படுத்தி தருகிற மனநிறைவோடு உள்ளோம்.

அ.தி.மு.க. தொடர்ந்து பல்வேறு அரசியல் வெற்றிகளைக் குவிக்க வேண்டிய பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது. அடுத்து வரும் சட்டமன்ற பொதுத்தேர்தலில், இதற்கு முன் பெற்ற வெற்றிகளை காட்டிலும் பெரிய வெற்றியை அ.தி.மு.க. பெற்றாக வேண்டும்.

அதுவே, நம் எம்.ஜி.ஆருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடன் என்பதை அ.தி.மு.க.வினராகிய நீங்கள் ஒவ்வொருவரும் உணர்ந்து, சூளுரை ஏற்கும் தருணமாக அமைந்திட வேண்டும்.

உங்கள் அன்புச் சகோதரியின் தலைமையிலான அரசு, துறைதோறும் ஆற்றி வரும் மகத்தான மக்கள் நலப் பணிகளை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள். அனைவரும் மகிழும் வண்ணம் மக்களுக்கு தொண்டாற்றுங்கள். பல்வேறு பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணி செய்து வரும் மக்கள் பிரதிநிதிகளாகிய அ.தி.மு.க. நிர்வாகிகளும், நிர்வாக பொறுப்புகளில் பணியாற்றி வருபவர்களும், என் உயிரினும் மேலான அ.தி.மு.க. தொண்டர்களும் ஒவ்வொருவரும் தங்கள் பணிகளை நேர்மையாகவும், திறமையாகவும் செய்யுங்கள்.

அ.தி.மு.க.வுக்கு பெருமை சேர்க்கும் வண்ணம் உங்கள் ஒவ்வொருவருடைய பணியும் அமையட்டும். வெற்றி ஒன்றே நம் குறிக்கோள் என்பதை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள். எம்.ஜி.ஆரின் புகழுக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் உங்கள் பணிகள் அமையட்டும். வெற்றிக்கான பணிகள் அனைத்தையும் தொடங்கிடுவீர் என்று உங்கள் அனைவருக்கும் அன்புக் கட்டளை இடுகிறேன்.இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளார்.