‘வெள்ள துயரத்தில் இருந்து உங்களை விரைவில் மீட்பேன்’: ‘வாட்ஸ் அப்’ மூலம் மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உறுதி

‘வெள்ள துயரத்தில் இருந்து உங்களை விரைவில் மீட்பேன்’: ‘வாட்ஸ் அப்’ மூலம் மக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா உறுதி

புதன்கிழமை, டிசம்பர் 16, 2015,

‘வெள்ள துயரத்தில் இருந்து உங்களை விரைவில் மீட்பேன். கவலை வேண்டாம்’ என பொதுமக்களுக்கு முதல்வர் ஜெயலலிதா ’வாட்ஸ் அப்’ மூலம் உறுதி அளித்துள்ளார்.”எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள், எனக்கு சுயநலம் அறவே கிடையாது, எனக்கு எல்லாமே நீங்கள் தான்” என்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக முதல்வர் ஜெயலலிதா ஆறுதல் அளிக்கும் வகையில் பேசியுள்ளார்.

சென்னை, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ளத்தால் கடும் பாதிப்பு ஏற்பட்டது. மிதமிஞ்சி பெய்த மழையால் சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதந்தது. இதில் சிக்கி அவதிப்பட்ட மக்களை மீட்க பிரதமருடன் பேசி, ஹெலிகாப்டர் மற்றும் மீட்பு படகுகளை வரவழைத்து 20 லட்சம் பேரை காப்பாற்றினார் முதல்வர் ஜெயலலிதா.

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட  பகுதிகளை ஹெலிகாப்டர் மூலம் பார்வையிட்டு, உணவு, தங்குமிடம், உடைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கி பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதலும் கூறினார். இதற்கிடையே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் மேலும் ஆறுதல் அடையும் வகையில் வாட்ஸ் அப்பில் பேசி முதல்வர் ஜெயலலிதா நம்பிக்கையளித்துள்ளார். அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு மூலம் வெளியிடப்பட்ட இந்த வாட்ஸ் அப் நம்பிக்கை மாநிலம் முழுவதும் சுமார் 70 லட்சம் பேரை சென்றடையும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாட்ஸ் அப் மூலம் முதல்வரும் அதிமுக பொதுசெயலாளருமான ஜெயலலிதா பேசியிருப்பதாவது., வணக்கம் . உங்கள் அன்பு சகோதரி ஜெயலலிதா பேசுகிறேன். கடந்த நூறு ஆண்டுகள் கண்டிராத மிகப் பெரும் தொடர் மழை ஏற்படுத்திய வெள்ளச் சேதங்களால் நீங்கள் அடைந்துள்ள துயரங்களை நினைத்து நினைத்து நான் வருந்துகிறேன். கவலை வேண்டாம். இது உங்கள் அரசு. எதையும் எதிர் கொண்டு வெல்லும் சக்தியை எனக்கு நீங்கள் அளித்திருக்கிறீர்கள். உங்களுக்காக நான், உங்களோடு எப்போதும் நான் இருக்கிறேன். விரைவில் இப்பெரும் துன்பத்திலிருந்து உங்களை மீட்டு புது மலர்ச்சியும் எழுச்சியும் அடையச் செய்வேன். இது உறுதி. போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகளையும் நிவாரணப் பணிகளையும் புனரமைப்புப் பணிகளையும் முழு வீச்சில் முடுக்கி விட்டிருக்கிறேன். அமைச்சர்களும், அரசு அலுவலர்களும், காவல் துறையினரும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையினரும், முப்படையினரும், தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினரும் மற்றும் தன்னார்வத் தொண்டர்களும் அயராது தோளோடு தோள் சேர்ந்து உங்களுடன் அயராது உழைத்தார்கள். உங்களுக்கு வரும் துன்பங்களையெல்லாம் நானே சுமக்கிறேன். எனக்கென்று தனி வாழ்க்கை கிடையாது. எனக்கென்று உறவினர் கிடையாது. எனக்குச் சுயநலம் அறவே கிடையாது. எனக்கு எல்லாமும் நீங்கள்தான். என் இல்லமும் உள்ளமும் தமிழகம்தான். என் பெற்றோர் வைத்த ஜெயலலிதா என்ற பெயரை மறந்து போகும் அளவுக்கு, நீங்கள் அழைக்கின்ற அம்மா என்கின்ற ஒரு சொல்லுக்காகவே என் வாழ்நாட்களை உங்களுக்காக அர்ப்பணித்து உழைத்துக் கொண்டிருக்கிறேன். இந்த அரசு இயற்கைப் பேரிடர்களை வெற்றி கொள்வதில் எப்போதும் பெயர் பெற்ற அரசு என்பதை மீண்டும் ஒரு முறை நிலை நாட்டுவேன். எத்துயர் வரினும் அதையும் இத்தாயின் கரங்கள் துடைக்கும் என்ற நம்பிக்கையோடு இருங்கள். நன்றி…

இவ்வாறு உருக்கமாக முதல்வர் ஜெயலலிதா பேசியுள்ளார்.