வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று பெரியாறு அணை மற்றும் அமராவதி அணையிலிருந்து நாளை நீர் திறக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு: 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று பெரியாறு அணை மற்றும் அமராவதி அணையிலிருந்து நாளை நீர் திறக்க முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவு: 60 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதிபெற நடவடிக்கை

ஞாயிறு, நவம்பர் 29,2015,

தேனி மாவட்டம் பெரியாறு அணையிலிருந்தும், திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையிலிருந்தும் பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், தேனி மாவட்டம், பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு, பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, பெரியாறு அணையிலிருந்து கம்பம் பள்ளத்தாக்கிலுள்ள பி.டி.ஆர் மற்றும் தந்தை பெரியார் வாய்க்கால்களின் கீழ் உள்ள ஒருபோக பாசன நிலங்களுக்கு பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறந்து விட தாம் ஆணையிட்டுள்ளதாகவும், இதனால், தேனி மாவட்டம், தேனி மற்றும் உத்தமபாளையம் வட்டங்களில் உள்ள 5 ஆயிரத்து 146 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்றும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து, திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுமாறு வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாகவும், வேளாண் பெருமக்களின் வேண்டுகோளினை ஏற்று, திருப்பூர் மாவட்டம், அமராவதி அணையிலிருந்து திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களிலுள்ள அமராவதி பாசன அமைப்பின்கீழ் உள்ள புதிய மற்றும் பழைய ஆயக்கட்டு பாசனப் பகுதிகளுக்கு நாளை முதல் தண்ணீர் திறந்து விட தாம் ஆணையிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இதனால், திருப்பூர் மற்றும் கரூர் மாவட்டங்களில் உள்ள 54 ஆயிரத்து 637 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்பதையும் தாம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்வதாக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.