1.91 கோடி குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

1.91 கோடி குடும்பங்களுக்கு சிறப்பு பொங்கல் பரிசு:முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

புதன், ஜனவரி 06,2016,

பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சிறப்புப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், உலகத் தமிழர் அனைவராலும் கொண்டாடப்படும் திருவிழா தமிழர் திருநாள் எனப்படும் பொங்கல் பண்டிகை ஆகும். பொங்கல் திருநாளான அறுவடைத் திருநாள் உழவருக்கு நன்றி செலுத்தும் திருநாள் ஆகும்.

இறைவனுக்கும், இயற்கைக்கும், உழவருக்கும்,உழவருக்கு உறுதுணையாக இருக்கும் கால்நடைகளுக்கும் நன்றி நவில்கின்ற நாள் பொங்கல் திருநாள்.

பொங்கல் திருநாள் அறுவடைத் திருநாளாக உள்ளதால், தமிழர் கலாச்சாரத்தில் இந்த நாள் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.

இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை தமிழக மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடும் வகையில், அரிசி குடும்ப அட்டை உடைய குடும்ப அட்டைதாரர்கள்,காவலர் குடும்ப அட்டை பெற்றுள்ள காவலர் குடும்பங்கள் மற்றும் முகாம்களில் தங்கியுள்ள இலங்கைத் தமிழர் குடும்பங்கள் ஆகியோருக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீளக் கரும்புத் துண்டு மற்றும் 100 ரூபாய் ரொக்கம் ஆகியவை அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் பொங்கல் பரிசுத் தொகுப்பு பொங்கல் திருநாளுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட நியாய விலைக் கடைகள் மூலம் வழங்கப்படும். இதன் மூலம் அரசுக்கு 31.8 கோடி ரூபாய் செலவு ஏற்படும்.

என்னுடைய இந்த நடவடிக்கையின் மூலம் 1 கோடியே 91 லட்சம் குடும்பங்கள் பயன் பெறுவர்.

ஏழை, எளிய, சாமானிய மக்கள் பொங்கல் பண்டிகையை சீரோடும், சிறப்போடும் கொண்டாட இது வழி வகுக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.