2ஜி ஊழல் உள்ளிட்ட பல்வேறு ஊழல்களை அரங்கேற்றி தமிழகத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியவர் கருணாநிதி : இந்திய கம்யூனிஸ்டு தலைவர் தா.பாண்டியன் குற்றச்சாட்டு
வெள்ளி, மார்ச் 18,2016,
மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது, அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி, 2ஜி ஊழல் உள்ளிட்ட தொலைத்தொடர்புத் துறையில் நடத்திய முறைகேட்டினால், தமிழகத்திற்கு மிகப்பெரும் அவமானத்தை ஏற்படுத்தியவர் கருணாநிதி என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பகிரங்கமாகக் குற்றம்சாட்டியுள்ளது.
சென்னையில் இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், தேசிய நிர்வாகக் குழு உறுப்பினருமான திரு. தா. பாண்டியன், தமிழக மக்கள் வழங்கிய அதிகாரத்தை தி.மு.க. தலைவர் கருணாநிதி தவறாகப் பயன்படுத்தி, தொலைத்தொடர்புத் துறையைக் கேட்டு பெற்று, 2ஜி ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் – தயாநிதி மாறன், தனது மத்திய அமைச்சர் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வீட்டிலேயே தொலைத்தொடர்பு இணைப்பகம் ஏற்படுத்தி, சன் டி.வி.க்கு பயன்படுத்தியது – ஏர்செல் மேக்ஸிஸ் பங்குகள் விற்பனை செய்யப்பட்டதில் 700 கோடி ரூபாய் ஆதாயம் பெற்றது என தமிழகத்திற்கு மிகப்பெரும் தலைகுணிவையும், அவமானத்தையும் ஏற்படுத்தியவர் என குற்றம்சாட்டினார். இலங்கையில் கடந்த 2009-ம் ஆண்டு உச்சக்கட்டபோர் நடைபெற்ற போது, போர் நின்றுவிட்டதாக தெரிவித்து, ஆயிரக்கணக்கான இலங்கை தமிழர்களைக் கொல்ல காரணமாக இருந்தவர் கருணாநிதி என, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு. முத்தரசன் புகார் தெரிவித்தார்.