34 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: பிரதமரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்

34 மீனவர்களை விடுவிக்க உடனடியாக நடவடிக்கை எடுங்கள்: பிரதமரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தல்

ஞாயிறு, மே 01,2016,

இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ள 34  தமிழக மீனவர்கள் மற்றும் அவர்களது 88 படகுகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று பிரதமருக்கு எழுதி உள்ள கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

‘ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் மீன்பிடி தளத்தில் இருந்து 3 பாரம்பரிய மீன்பிடி படகுகளில் சென்ற 21 மீனவர்களை, கடந்த 27-ம் தேதி இலங்கை கடற்படையினர் கைது செய்து தலைமன்னார் கொண்டு சென்றுள்ளனர். இதை தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். அவர்கள் தங்கள் பாரம்பரிய மீன்பிடி பகுதியான பாக் ஜலசந்தியில் மீன்பிடிக்கும் போது தான் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்தியா – இலங்கை இடையில் கடந்த 1974 மற்றும் 1976-ம் ஆண்டுகளில் செய்யப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதால், சர்வதேச கடல் எல்லை என்பது முடிந்துவிட்டதாக மத்திய அரசு கருதக்கூடாது என்பதே தமிழக அரசின் நிலைப்பாடு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறேன்.

இலங்கை வசம் ஏற்கனவே, 85 படகுகள் மற்றும் 13 மீனவர்கள் உள்ளனர். நீண்டகாலமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள படகுகள் பயன்படுத்த முடியாமல் சேதமடைந்துவிட்டன. இதனால், ஏழை மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த படகுகள் மற்றும் மீன்பிடி உபகரணங்களை மீட்டு அவற்றை சீரமைத்து விரைவில் மீன்வர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என மீண்டும் கோரிக்கை வைக்கிறேன்.

மேலும், இலங்கை வசம் தற்போதுள்ள 34 மீனவர்கள் மற்றும் 88 படகுகளை விடுவிக்க விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா அந்த கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார். தமிழக மீனவர்கள் கடலில் மீன் பிடிக்க செல்லும் போதெல்லாம் அவர்களை துன்புறுத்தி வரும் இலங்கை கடல்படை அவ்வப்போது அவர்களை கைதுசெய்து சிறையில் அடைத்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் கட்சத்தீவை இலங்கைக்கு தாரைவார்த்து கொடுத்ததுதான். அதனால் தான் கட்சத்தீவை மீட்க வேண்டும் எனக்கோரி சுப்ரீம்கோர்ட்டில் முதல்வர் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்துள்ளார்.

கட்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது கருணாநிதி முதல்வராக இருந்தபோதுதான். இந்த உண்மையை பிரச்சாரக்கூட்டங்களிலும் தெரிவித்து வருகிறார் முதல்வர் ஜெயலலிதா. மேலும் மீனவர்களுக்காக பல திட்டங்களை அறிவித்தவர் முதல்வர் ஜெயலலிதா. அவர்கள் சிறை பிடிக்கப்படும்போது அவர்களை மீட்கக்கோரி பலமுறை பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த வகையில் நேற்றும் அவர் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் 34 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டுள்ளார்.