70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவும்,மகாமகத் திருவிழாவை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் முதலமைச்சர் உத்தரவுப்படி,மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

70 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறவும்,மகாமகத் திருவிழாவை மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் முதலமைச்சர் உத்தரவுப்படி,மேட்டூர் அணையில் இருந்து இன்று முதல் தண்ணீர் திறப்பு

வியாழன் , ஜனவரி 28,2016,

காவேரி டெல்டா பகுதியில் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்களில், காலதாமதமாகப் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்குத் தேவையான தண்ணீரை தொடர்ந்து வழங்கவும், கும்பகோணம் மகாமகத் திருவிழாவை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடவும் ஏதுவாக, இன்றுமுதல், ஃபிப்ரவரி மாதம் 25-ம் தேதிவரை, மேட்டூர் அணையில் இருந்து, நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறந்துவிட முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
<
முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள அறிக்கையில், காவேரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்திற்காக கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 9-ம் தேதி, மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவிட தாம் ஆணையிட்டதை அடுத்து, காவேரி டெல்டாவில் முழுவீச்சில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
<
காவேரி டெல்டாவில் ஒரு சில பகுதிகளில் தாமதமாக நடவுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டதால் அப்பகுதிகளில் பயிரிடப்பட்டுள்ள பயிர்கள் அறுவடை செய்வதற்கு காலதாமதம் ஆகும் எனத் தெரிவித்து, மேட்டூர் அணை வழக்கமாக மூடப்படும் நாளான ஜனவரி மாதம் 28-ம் நாளுக்குப் பிறகும் தொடர்ந்து தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று வேளாண் பெருங்குடி மக்களிடமிருந்து தமக்கு கோரிக்கைகள் வந்துள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
<
மேலும், தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கொண்டாடப்படும் மகாமகத் திருவிழா, அடுத்த மாதம் 22-ம் தேதி நடைபெற உள்ளது – நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பொதுமக்கள் மகாமகத் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக கும்பகோணம் நகரத்திற்கு வர இருக்கின்றனர் – விழாவிற்கு வரும் பொதுமக்களின் வசதிக்காக, கும்பகோணம் நகராட்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தருமாறு ஏற்கெனவே தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
<
இத்தகைய சூழ்நிலையில், காலதாமதமாக சுமார் 70 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள பயிர்களுக்குத் தேவையான தண்ணீரை தொடர்ந்து வழங்கவும், மகாமகத் திருவிழாவினை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதற்கு ஏதுவாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளை ஒரு சிறப்பு நிகழ்வாகக் கருதி, இன்றுமுதல் ஃபிப்ரவரி மாதம் 25-ம் தேதிவரை, நாள் ஒன்றுக்கு 6 ஆயிரம் கன அடி தண்ணீரை மேட்டூர் அணையிலிருந்து திறந்துவிட தாம் ஆணையிட்டுள்ளதாக முதலமைச்சர் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.